இந்தியப் பங்குச்சந்தை மிகவும் சிறப்பாக வளர்ச்சி அடையவும், அதிகளவிலான முதலீடுகள் குவியவும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்று ஐபிஓ. 2021ல் வந்த பல ஐபிஓ-க்கள் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அள்ளிக்கொடுத்தது.
இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 30 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்த 30 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதன் மூலம் சுமார் 45, 000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதைவிடவும் மிக முக்கியமானது, ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ள 30 நிறுவனத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களாகும்.
சோமேட்டோ-வின் வெற்றி
ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் ஐபிஓ வெளியிட முன்வருகின்றனர்.
டெக் நிறுவனங்கள் ஆதிக்கம்
இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் அமெரிக்கச் சந்தை போல இந்திய சந்தையிலும் டெக் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கச் சந்தையில் பல துறை நிறுவனங்கள் இருந்தாலும் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தான் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் தற்போது நிலவரத்தின் படி
பாலிசிபஜார் (6, 017 கோடி ரூபாய்), எம்கியூர் பார்மாகியூட்டிகல்ஸ் (4, 500 கோடி ரூபாய்), நைகா (4, 000 கோடி ரூபாய்), சிஎம்எஸ் இன்போ சிஸ்டம்ஸ் (2, 000 கோடி ரூபாய்), மொபிகிவிக் சிஸ்டம்ஸ் (1, 900 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவது உறுதியாகியுள்ளது.
ஒப்புதல் கிடைத்தால்..
நார்த் ஆர்க் கேப்பிடல் (1, 800 கோடி ரூபாய்), Ixigo (1, 600 கோடி ரூபாய்), சபயர் புட்ஸ் (1, 500 கோடி ரூபாய்), பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (1, 330 கோடி ரூபாய்), ஸ்டெர்லைட் பவர் (1, 250 கோடி ரூபாய்), ரேட்கெயின் டிரால் டெக்னாலஜிஸ் (1, 200 கோடி ரூபாய்) மற்றும் சுப்ரியா லைப்சயின்ஸ் (1, 200 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில் இந்த நிறுவனங்களும் ஐபிஓ வெளியிடும்.
இதைத் தவிரச் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் உள்ளது.
ஐபிஓ தாக்கம்
தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும் போது 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் ஐபிஓ தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் சந்தையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தால் கட்டாயம் இந்த IPO BOOM 2021 முழுவதும் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
40 நிறுவனங்கள் ஐபிஓ
2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 40 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் சுமார் 64, 217 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது. இந்த முதலீட்டாளர்களுக்கும், பங்குச்சந்தைக்கும் இந்த 2021 ஐபிஓ மூலம் மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
செப்டம்பர் 29ஆம் தேதி ஆதித்யா பிர்லா சன் லைப் AMC சுமார் 2, 778 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ வெளியிட உள்ளது.