தலைப்பு சரி தான், மார்கன் ஸ்டான்லியே இந்தியாவின் சென்செக்ஸ் அடுத்த வருட ஜூனுக்குள் 45,000 புள்ளிகளைத் தொட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20, 2019) அன்று காலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை அதிகபட்சம் 25.17 சதவிகிதமாக குறைத்தார். "பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய.." என மெர்சல் விஜய் போல சென்செக்ஸில் சந்தை தீ பற்றி எரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1921 புள்ளிகள் அதிகரித்து ஒரே நாளில் சென்செக்ஸ் 38,014 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை காலை 36,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி மாலை வர்த்தக நேர முடிவில் 38,014 புள்ளிகளுக்கு நிறைவு அடைந்தது, இன்றும் அதே போல ஒரு வான வேடிக்கை நடக்கும் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று காலை சென்செக்ஸ் 38,844 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 38,014 புள்ளிகளில் இருந்து நேரடியாக 830 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
சென்செக்ஸ் கடந்த 20 மே 2019 தொடங்கி 19 ஜூலை 2019 வரை தான் அதிக காலம் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி இருக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து 39,000 என்பது மிகப் பெரிய ரெசிஸ்டென்ஸ் புள்ளியாகத் தான் இருந்து இருக்கிறது. ஆனால் நிதி அமைச்சரின் அறிவிப்பால், இரண்டே வர்த்தக நாளில் 36,214 புள்ளிகளில் இருந்து 36400, 37000, 37410, 37750, 38000, 38450, 38800, 39000 என பல ரெசிஸ்டென்ஸ்களை தொடர்ந்து உடைத்து இருக்கிறது.
சரி ஒருவேளை நாளையும் சந்தை ஏற்றம் காணத் தொடங்கினால் 39,500 மற்றும் 39,800 ஆகிய புள்ளிகள் தான் அடுத்த ரெசிஸ்டென்ஸாகத் தெரிகிறது. இந்த இரண்டு ரெசிஸ்டென்ஸ்கலையும் சென்செக்ஸ் உடைத்து அடுத்த சில வர்த்தக நாளில் வர்த்தகம் நிறைவு அடைந்தால், சென்செக்ஸை கட்டுப்படுத்த அடுத்த இலக்கு நிர்ணயிப்பது சிரமமாகிறது. ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,800 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின் 38,500 புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம்.
இன்று காலை சென்செக்ஸ் 38,844 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,090 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 1,075 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,542 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,603 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 329 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 32 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,794 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,630 பங்குகள் ஏற்றத்திலும், 978 பங்குகள் இறக்கத்திலும், 186 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,794 பங்குகளில் 103 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 111 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் சுமார் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐடி, பார்மா ஆகிய இரண்டு துறை சார் இண்டெக்ஸ்கள் தான் இறக்கத்தில் வர்த்தகமாயின. வங்கி, நிதி, எஃப் எம் சி ஜி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. பாரத் பெட்ரோலியம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், ஐஓசி, லார்சன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பவர் கிரிட் கார்ப், ஜி எண்டர்டெயின்மெண்ட், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், சிப்லா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.92-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.22 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.