இன்று காலை 9.00 மணிக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு 73.24 ரூபாய் என்று அசர அடிக்கும் ஓப்பனிங்கை கொடுத்திருக்கிறது இந்திய ரூபாய் மதிப்பு. இந்த சரிவு இது வரை இல்லாத உச்சம் என்பது கூடுதல் செய்தி.
வியாழக்கிழமை நிலை
கடந்த வியாழக்கிழமையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 73 ரூபாயைத் தொட்டு எப்படியோ சமாளித்து வர்த்தகமாகி வந்தது. திங்கட்கிழமை வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 72.91 ரூபாய்க்கு முடிந்தது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறையாக இருந்த சந்தை இன்று காலையிலேயே 33 பைசா இறக்கம் கண்டு 73.24-க்கு வர்த்தகமாகி வருகிறது.
கச்சா எண்ணெய்
கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 84 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. பற்றாக் குறைக்கு அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் பொருளாதார தடை வேறு இருப்பதால், சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெய் வரத்து இருக்காது.
குறைந்த பொருள், அதிக விலை
இதனால் மொத்த கச்சா எண்ணெயின் வரத்து குறையும். பொருள் குறைவாக இருக்கிறது. ஆனால் வாங்குபவர்களுக்கு தேவை அளவு குறையவில்லை. எனவே இதன் அடிப்படையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும். ஈரான் மட்டும், நாள் ஒன்றுக்கு உலக கச்சா எண்ணெய் தேவையில் மூன்று சதவிகிதம் சப்ளை செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ கூட்டம்
ஆர்பிஐ இன்று முதல் வரும் அக்டோபர் 05-ம் தேதி வரையான கூட்டத்தில் வங்கிகளுக்கு ஆர்பிஐ கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் ஆர்பிஐ மற்ற வங்கிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளும் கடன்களுக்கான வட்டி விகிதம் இரண்டையும் தீர்மானிக்க இருக்கிறது. இதில் ஏற்படும் மாற்றங்களும் சந்தையை நேரடியாக பாதிக்கும்.
காலை 11.10 மணியளவில் சந்தை
நிஃப்டி இன்று காலை 11,007 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, காலை 11.10 மணியளவில் 91 புள்ளிகள் இறக்கம் கண்டு 10916 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 50-ன் 50 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 35 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ்
இன்று காலை 36602 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி காலை 11 மணியளவில் 349 புள்ளிகள் இறக்கம் கண்டு 36253 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், 19 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.