பொதுவாக பங்கு வெளியீடு (IPO) என்றாலே, சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்பார்கள். ஏனெனில் பெரிய நிறுவனங்களின் பங்குகளை கூட, குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக ஒரு நிறுவனத்தின் பங்கினை குறைந்த விலையில் வாங்க ஐபிஓ ஒரு சிறந்த ஆப்சன் எனலாம். அவ்வாறு ஐபிஓ வெளியிடும் பங்குகள் பங்கு சந்தையில் பட்டியலிடும்போதே, சில பங்குகள் நல்ல லாபத்தில் பட்டியலிடுகின்றன.
அப்படி ஒரு ஜாக்பாட் வாய்ப்பினை தான் அளித்திருக்கிறது நய்கா நிறுவனம். உண்மையில் முதலீட்டாளர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பு தான். குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்களுக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட் எனலாம்.
எனினும் எத்தனை பேருக்கு இந்த ஆஃபர் கிடைத்தது என்பது மிகப்பெரிய கேள்வி தான்.
மிக நல்ல வாய்ப்பு
பங்கு சந்தையில் நிறுவனங்கள் ஆரம்பத்தில் நுழையும்போது முதலீட்டாளர்களை கவர, நல்ல நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் வெளியிடுவார்கள். ஆனால் அவை எதிர்காலத்தில் நல்ல ஏற்றம் காணலாம் என நம்பப்படுவதுண்டு. அந்த வகையில் நய்கா நிறுவனத்தின் பங்கு விலையானது பங்கு சந்தையில் பட்டியலிடும்போதே 79% பிரீமிய விலையில் தான் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் சந்தையில் நுழையும்போதே 79% லாபத்தில் தான் நுழைந்துள்ளனர்.
நல்ல எதிர்காலம் உண்டு
குறிப்பாக ஈ-காமர்ஸ் வணிகங்கள் நல்ல வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், நய்கா நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அண்டை நாடுகளில் அழகு சாதன பொருட்களுக்கான சந்தையானது பெரும் வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவில் அந்தளவுக்கு வளர்ச்சி காணவில்லை. ஆக வரும் காலத்தில் நய்கா நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனலாம். இந்த நிலையில் அதனை எதிரொலிக்கும் விதமாக இந்த நிறுவனத்தின் பங்கும் ஏற்றம் கண்டுள்ளது.
ஐபிஓ எப்போது
நய்கா நிறுவனம் கடந்த அக்டோபர் 28ம் தேதி பொது பங்கு வெளியீட்டினை செய்தது. நவம்பர் 1 பங்கு வெளியீடு முடிவடைந்த நிலையில், இன்று பங்கு சந்தையில் பட்டியலிட்டுள்ளது.
நய்கா நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டு விலையானது 1,085 - 1,125 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
தொடக்கம் எப்படி?
இன்று பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் விலையானது தொடக்கத்திலேயே பிஎஸ்இ-யில் 2,001 ரூபாயும், என் எஸ் இ-யில் 2,018 ரூபாயாகவும் தொடங்கியது. ஆக இதன் ஐபிஓ விலையுடன் ஒப்பிடும்போது 79% பிரீமியத்தில் தான் பட்டியலிடப்படுள்ளது.
முதலீட்டாளர்களின் ஆர்வம்
5,352 கோடி ரூபாய்க்கான இந்த பங்கு வெளியீட்டில் 87.78 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் 2.64 கோடி பங்குகளுக்கு, 216.59 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சில்லறை முதலீட்டாளர்களின் ஆர்வம்
இதே தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் அல்லாத மிகப்பெரிய முதலீட்டாளர்களுக்கு வெளியீடு செய்யப்பட்ட பங்குகளில், முறையே 91.18 மடங்கு மற்றும் 112.02 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதே சில்லறை முதலீட்டாளர்கள் 12.24 மடங்கு விண்ணப்பித்திருந்தனர். இதே ஊழியர்கள் 1.88 மடங்கு விண்ணப்பித்துள்ளனர்.
தற்போதைய விலை நிலவரம்
நய்கா நிறுவனத்தின் பங்கு விலை தற்போது என் எஸ் இ-ல் 83.56% அல்லது 940 ரூபாய் அதிகரித்து 2,065 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதே பி எஸ் இ-ல் 80.72% அல்லது 908.10 ரூபாய் அதிகரித்து, 2,033.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இன்றைய உச்ச விலை தற்போது வரையில் 2,129 ரூபாயாகும். குறைந்த விலை 1994.10 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 2129 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 1,125 ரூபாயாகும்.