நேற்று வியாழக்கிழமை அன்று இந்திய ரூபாயின் மதிப்பு 73.59-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே நிலை பெற்று 73.60 முதல் 73.70க்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது.
ரூபாய் பாதிப்பு
பல பங்குச் சந்தை வல்லுநர்களும், அனலிஸ்டுகளும் ஆர்பிஐ தன் ரெப்போ ரேட்டை அதிகரிக்கவே செய்வார்கள் என ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கு முரணாக ஆர்பிஐ வட்டி விகித கூட்டத் தொடரில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வில்லை. இந்த செய்தி வெளியானதுமே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு சரியத் தொடங்கி தன் வாழ்நாள் புதிய சரிவான 74.10-ல் வர்த்தகமாகி வருகிறது.
சந்தை எதிரொலி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் வாழ்நாள் சாதனை படைத்ததை சந்தையும் இறக்கம் காட்டி கொண்டாடி வருகிறது. காலையில் இருந்து படிப்படியாக இறக்கம் கண்டு வந்த சென்செக்ஸ், ரூபாயின் புதிய உச்ச செய்தியை கேட்ட பின் ஒட்டு மொத்தமாக தன் இறக்கத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. தற்போது சென்செக்ஸ் சுமாராக 600 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
ஆறு பேரும் ஆதரவு
ஆர்பிஐ கூட்டத்தில் ஆறு பேர் கொண்ட குழு தான் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாமா குறைக்கலாமா என்கிற முடிவை எடுப்பார்கள். வட்டி விகித ஓட்டு எடுப்பில் குழுவில் இருந்த ஆறு பேருமே இந்த முறை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காணாமல் போன கலால் வரி ரத்து
நேற்று வியாழக்கிழமை மத்திய அரசு ரத்து செய்த 1.5 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியின் தாக்கத்தை மக்கள் அனுபவிப்பதற்கு முன்னேயே நேரடியாக இந்த ரூபாய் மதிப்பு சரிவு சாப்பிட்டு விட்டது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எந்த பயணும் இல்லாமலேயே போய்விட்டது என்று ஆர்பிஐ குழுவினர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.