இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை நாணய கொள்கை அறிவிப்பினை வெளியிட உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி இரண்டும் சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் செவ்வாய்க்கிழமை சரிந்துள்ளது. அமெரிக்கப் பங்கு சந்தை அதிக லாபம் அளித்த நிலையில் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்ட பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்றை இந்திய பங்கு சந்தை நிலவரத்தினை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்
இன்றைய சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் 108.68 புள்ளிகள் என 0.31 சதவீதம் சரிந்து 34,903.21 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 35.35 புள்ளிகள் என 0.33 சதவீதம் சரிந்து 10,593.15 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஆற்றல் மற்றும் எண்ணெய் & எரிவாயு துறையினைத் தவிரப் பிற பங்குகள் எல்லாம் நட்டம் அளித்துள்ளன. டெலிகாம் துறை பங்குகள் 3.08%, மூலதன பொருட்கள் துறை 1.96 சதவீதமும், தொழிற்சாலைகள் துறை 1.80 சதவீதமும், ஹெல்த்கேர் துறை பங்குகள் 1.40 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், மாருதி சுசூகி மற்றும் எச்டிபெசி பங்குகள் இன்று லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
பார்தி ஏர்டெல், எல்&டி, டாக்ட்ட ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் கோல் இந்தியா நிறுவனங்கள் நட்டத்தினை அளித்துள்ளன.