மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் முதன் முறையாக 35,081.82 புள்ளிகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டியும் முதன் முறையாக முன்பு எப்போதும் இல்லாத உச்சமான 10,788.85 புள்ளிகளைத் தொட்டுள்ளது. இதற்கு முன்பு ஜனவரி 15-ம் தேதி 34,963.69 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்து இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் 0.89 சதவீதம் என 310.77 புள்ளிகள் உயர்ந்து 35,081.82 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது, அதே நேரம் நிப்டி 0.82 சதவீதம் என 88.10 புள்ளிகள் உயர்ந்து 10,788.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் சந்தையில் இருந்து கடனாகப் பெற இருந்த 50,000 கோடி ரூபாயினை 20,000 கோடி ரூபாயாகக் குறைப்பதாக அறிவித்து அடுத்து பங்கு சந்தை இன்று புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்திய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு அறிக்கை முடிவுகள் நேர்மறையாக வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது. நேற்று இந்திய முதலீட்டாளர்கள் 246.38 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்ற நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 693.17 கொடி ரூபாய் முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன.
துறை வாரியான அறிக்கை
மும்பை பங்கு சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகள் 1.2 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 1.05 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் துறை பங்குகள் 1.04 சதவீதமும், மருத்துவ துறை பங்குகள் 0.96 சதவீதமும் உயர்ந்தது. மறுபக்கம் நுகர்வோர் சாதன பங்குகள் 0.51 சதவீதமும், எண்ணெய் நிறுவனப் பங்குகள் 0.35 சதவீதமும் சரிந்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 3.58%), ஆக்சிஸ் வங்கி (+ 3.47%), இன்ஃபோசிஸ் (+ 2.41%), அதானி போர்ட்ஸ் (+ 2.27%) மற்றும் யெஸ் வங்கி (+ 2.2%)
நட்டம் அளித்த பங்குகள்
விப்ரோ (-1.78%), ஹீரோ மோட்டோகார்ப் (-1.66%), ஓஎன்ஜிசி (-0.46%), கோல் இந்தியா (-0.38%), டாடா மோட்டார்ஸ் (-0.38%)