இந்திய பங்கு சந்தை புதன்கிழமை அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் தாக்கத்தினால் பிளாட்டாக முடிந்த நிலையில் வியாழக்கிழமை துவங்கிய உடன் ஜனவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது.
பிறபகல் 1:53 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 352.88 புள்ளிகள் என 0.96 சதவீதம் உயர்ந்து 36,615.76 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 91.85 புள்ளிகள் என 0.84 சதவீதம் உயர்ந்து 11,040.15 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது. பிப்ரவரி மாத்திற்குப் பிறகு மீண்டும் நிப்டி 11,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 முதல் 7 சதவீதம் வரை சரிந்தது. ஒரே இரவில் இந்த அளவிற்குக் கச்சா எண்ணெய் சரிவுக்குக் காரணம் லிபியா மீண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியினைத் துவங்கியது ஆகும். இதனால் ஆசிய பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனப் பங்குகளும் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை சரிவால் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் இன்று அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பேச்சுவார்த்தை
உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடுகளாக உள்ள அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப் போர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ள செய்து காலை வெளியானது ஆசிய சந்தையில் வர்த்தகம் சூடு பிடித்ததற்கான காரணமாக உள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 19 பைசா வரை உயர்ந்ததும் முதலீடுகள் அதிகரித்ததற்கான காரணம் ஆகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
ரூபாய் மதிப்பு உயர்ந்த உடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியுள்ளனர். தேசிய பங்கு சந்தைத் தரவின் படி 636.27 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர்.