சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியால் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, உணவுப் பொருட்களில் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மொத்த விலை பணவீக்கத்தை 30 மாத உயர்விற்குக் கொண்டு சென்றுள்ளது.
2016 டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 3.39 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனவரி மாதத்தில் 1.07 சதவீதம் உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 5.25 சதவீதமாக உள்ளது.
அதிகப்படியாக ஜூலை 2014இல் இதன் அளவு 5.41 சதவீதமாக இருந்தது.
வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் எரிபொருள் மற்றும் பவர் பிரிவில் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணவீக்கத்தின் அளவு இரண்டு மடங்கு அதிகரித்து 18.14 சதவீதமாக உயர்ந்துள்ளது, டிசம்பர் மாதம் இதன் அளவு வெறும் 8.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பணவீக்கம் 15.66 சதவீதத்தில் இருந்து 31.10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் OPEC. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC, 8 வருடங்களுக்குப் பின் தனது உற்பத்தி அளவுகளைக் குறைக்க முடிவு செய்தது. இதன் எதிரொலியாகவே பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் பணவீக்கம் 2017 ஜனவரி மாதத்தில் உயர்ந்துள்ளது.