டெல்லி: உலகமே இணைய வலையில் விழுந்து கிடக்கிறது. இணையத்தை நம்பித் தான் எல்லாமே..! வீட்டில் சாதாரணமாக லைட், ஃபேன் சுவிட்ச் போடுவது தொடங்கி, உணவு சாப்பிடுவது வரை இணையம் இல்லாமல் சிரமம் ஆகிவிட்டது.
இப்படி எல்லாமே இணையம் ஆகிக் கொண்டிருக்கும் போது, நம் வங்கி பணப் பரிமாற்றங்கள் மட்டும், பழைய முறைப்படி நெட் பேங்கிங் எல்லாம் செய்து கொண்டு இருந்தால் போர் அடிக்காதா என்ன..? அப்போது தான் யூ பி ஐ (UPI - Unified Payements Interace) என்கிற புதிய ரக சேவையைக் கொண்டு வருகிறது என் பி சி ஐ (NPCI - National Payment Corporation of India).
ஒரு ஸ்மார்ட்ஃபோன் + வங்கிக் கணக்கு விவரங்கள் ஏடிஎம் கார்ட் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம், பணத்தைப் பெறலாம். அந்த அளவுக்கு முன்னேறிவிட்டது.
இப்போது இந்த யூ பி ஐ பேமெண்ட்டே ஒரு பெரிய சாதனை படைத்து இருக்கிறது. கடந்த நவம்பர் 2019-ல் ஒரே மாதத்தில் 1.2 பில்லியன் (120 கோடி) பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம். இதை என் பி சி ஐ அமைப்பே இன்று உறுதி செய்து இருக்கிறது.
நவம்பர் 2018-ல் நடந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகளுடன், நவம்பர் 2019-ல் நடந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகளை ஒப்பிட்டால் இது 132 சதவிகிதம் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதுவே அக்டோபர் 2019 உடன் ஒப்பிட்டால் அது 6.1 சதவிகிதம் கூடுதல் பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறது. எவ்வளவு பணம் பரிமாற்றப்பட்டு இருக்கிறது...? என்றால்... கடந்த நவம்பர் 2019-ல் 1.89 லட்சம் கோடி ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டு இருக்கிறது.
இப்போது வரை இந்த யூ பி ஐ சேவையில் மொத்தம் 141 வங்கிகள் இருக்கின்றனவாம். தற்போது யூ பி ஐ சேவையை 10 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். அடுத்த 3 வருடத்துக்குள், யூ பி ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம் என்கிறார்கள் என் பி சி ஐ தரப்பினர்கள்.