இந்த நிறுவனத்தின் அதிபரான துல்சி தத்னி போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இருந்தார். ஆனால், இவரது நிறுவனத்தின் கடன் அளவு அதிகரிக்க ஆரம்பித்ததையடுத்து அந்தப் பட்டியலில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேற்றப்பட்டுவிட்டார்.
உலகின் 6வது மிகப் பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனமான சுஸ்லான் வெளிநாட்டு கரன்சி பத்திரங்கள் மூலம் திரட்டிய நிதி ரூ. 2,000. இந்தப் பணத்தை கடந்த மாதமே முதலீட்டாளர்களுக்குத் திரும்பத் தந்திருக்க வேண்டும் சுஸ்லான். ஆனால், பணமில்லாததால் இந்த மாதம் 27ம் தேதி வரை காலக்கெடுவை முதலீட்டாளர்கள் தந்துள்ளனர்.
இதனால் இவர்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் தர மீண்டும் 360 மில்லியன் டாலர் வரை கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது சுஸ்லான்.
இந் நிலையில் கடந்த மாதம் தனது சீன பிரிவை ரூ. 340 கோடிக்கு விற்றுவிட்ட சுஸ்லான், பணத் தேவைக்காக தனது ஜெர்மன் பிரிவான REpower நிறுவனத்தையும் விற்பது குறித்து யோசித்து வருவதாகத் தெரிகிறது. இதை வாங்க அல்ஸ்டோம் நிறுவனம் ரூ. 10,000 கோடி வரைத் தர தயாராக உள்ளது.
ஆனால், எக்காரணம் கொண்டும் REpower நிறுவனத்தை விற்க மாட்டோம் என சுஸ்லான் கூறுகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 3,800 கோடியளவுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள சுஸ்லான், அடுத்த நிதியாண்டுக்கு ரூ. 1,250 கோடியை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார தேக்கம் காரணமாக உலகெங்கும் உள்ள காற்றாலை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுவதால், காற்றாலைகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலையில் அவை உள்ளன.
சுஸ்லானின் பங்குகள் மதிப்பின்படி அதன் மதிப்பு ரூ. 3,500 கோடி. ஆனால், அதன் கடன் அளவு ரூ. 11,000 கோடியாக உள்ளது.