டெல்லி: நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.22,000 கோடி நட்டத்தை சந்தித்துள்ளதாக அந்நிறுவன தலைவர் ஆர்.எஸ். புடோலா கூறியுள்ளார்.
இது தொடர்பாக புடோலா கூறியுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது. 3 மாதங்களில் மட்டும் ரூ.22,451 கோடி நட்டத்தை இந்தியன் ஆயில் காப்பரேஷன் சந்தித்திருக்கிறது. சென்ற நிதி ஆண்டில் இதே காலாண்டில் ரூ.3, 719 கோடி அளவுக்குத்தான் நட்டம் ஏற்பட்டிருந்தது.
இதேபோல் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் ரூ.9, 428 கோடி இழப்பை சந்தித்துள்ளது. டீசல், கியாஸ் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட அரசு மானியம் வழங்க உறுதி அளித்தது. ஆனால் இந்த மானியம் வழங்கப்படவில்லை. இந்த இழப்புத் தொகை ஒரு தொடக்கம்தான்.
டீசல், சமையல் கியாஸ் போன்றவற்றின் விலையை உயர்த்துவதால் மட்டுமே நட்டத்தை சரிசெய்ய முடியும். எரிபொருட்களின் விலை நிர்ணய உரிமையை முழுமையாக எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது அரசே இவற்றின் விலையை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார் அவர்.