திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களுக்கு சொந்தப் பணத்தை யாரிடமாவது கொடுத்து ஏமாறவேண்டும் என்பது தலைவிதி போலிருக்கிறது. எத்தனை விளம்பரங்கள் செய்தாலும், அதிகாரிகள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினாலும் அதை எல்லாம் காதில் வாங்கிகொள்ளாமல் மோசடி நபர்களிடம் லட்சம் லட்சமாய் பணத்தை கட்டி ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். மாதாமாதம் சில ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதே என்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களை கட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஈமு கோழி மோசடியைத் தொடர்ந்து புதிதாக இப்பொழுது தேங்காய் மோசடி என்று புதிதாக ஒன்று கிளம்பியுள்ளது. தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2000 தேங்காய்கள் கொடுப்போம், அதை உடைத்து கொப்பரையாக தந்தால் அதற்கு உண்டான கூலி மற்றும் ரூ. 6000 போனஸ் வழங்கப்படும் என சில நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் இது மோசடியானது என்று உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத்தலைவர் செல்லமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உழைக்காமல் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பொதுமக்கள் தங்களின் பணத்தை இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.