இந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஏராளமானோர் புராஜெக்டுகள் இல்லாமல் பெஞ்சில் இருக்கும் நிலையில், ஊழியர்களை அமெரிக்காவுக்கும் அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இன்போசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் தனது மொத்த வருவாயில் 3 சதவீதத்தை இவ்வாறு காண்ட்ராக்ட் தரப்பட்ட நிறுவனங்களுக்காக செலவிட்டுள்ளது. அதே போல டிசிஎஸ் நிறுவனமும் 3 சதவீதத்தை செலவிட்டுள்ளது.
ஒபாமா அதிபரானதில் இருந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் வந்து பணியாற்ற தரப்படும் விசாவுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகிவிட்டன. இதனால் அமெரிக்க ஊழியர்களையே நியமிக்க வேண்டிய நிலைக்கு பல வெளிநாட்டு நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியான ரூ. 3,50,000 கோடியில் பாதிக்கும் மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது.
கடந்த ஆண்டில் இந்தியர்களுக்குத் தரப்படும் L1 விசாக்கள் 28 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டன. ஆனால், மற்ற நாடுகளுக்கு இந்த விசாக்கள் அதிகமாகத் தரப்பட்டன. இதன் மூலம் அமெரிக்க அரசு இந்திய ஐடி துறையை குறி வைத்து விசா கட்டுப்பாட்டை விதித்துள்ளது உறுதியாகியுள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் 25,000 இந்தியர்கள் சாப்ட்வேர் பணிகளுக்காக அமெரிக்க நிறுவனங்களுக்குச் செல்வது வழக்கம். இதில் 40 சதவீதம் பேருக்கு L1 பிரிவு விசாக்களே தரப்பட்டு வந்தன. இப்போது இந்த விசா பெருமளவு குறைந்துவிட்டது.
ஆனாலும் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அமெரிக்காவை குறை கூறாமல் அமைதி காத்து வருகின்றன. அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் உள்ளூர்காரர்களுக்கே வேலை என்ற கோஷம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசை பகைத்துக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை.
இந்த நிறுவனங்கள் விசா கிடைக்காமல் வேலைகளை அமெரிக்கர்களுக்குத் தர டீம்லீஸ், ஐகியா போன்ற நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமித்து வருவதால் இந்த காண்ட்ராக்ட் நிறுவனங்களின் வருமான விறுவிறுவென அதிகரித்துள்ளது.
ஒருத்தருக்கு நஷ்டம்.. இன்னொருத்தருக்கு லாபம்!