நாட்டில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயிக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல இடங்களில் உள்ள மண்டலங்களில் முட்டை கொள்முதல் அளவை வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கலில் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 334 காசுகளாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்தது.
இந்த நிலையில் நேற்று கூடிய கூட்டத்தில் 6 காசுகள் அதிகரித்து, முட்டை கொள்முதல் விலையை 340 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை முட்டை கொள்முதல் விலை இவ்வளவு அதிகரித்து இல்லை. ஆனால் முட்டைக் கோழி மற்றும் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது முட்டை கோழி கிலோ ரூ.38க்கும், கறிக்கோழி கிலோ ரூ.69க்கும் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் காய்கறி விலை உயர்வு காரணமாக முட்டை நுகர்வோரின் அளவு அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டே புதிய விலை உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முட்டை கொள்முதல் விலையில் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், முட்டை பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வட மாநிலத்தில் தொடர் மழை காரணமாக முட்டை நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மும்பையில் முட்டை கொள்முதல் விலை 338 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 340 காசுகளும், கொல்கத்தாவில் 365 காசுகளும், பெங்களூரில் 328 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.