டெக்கான் குரோனிக்கல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. இந்த நிறுவனம் ரூ3 ஆயிரம் கோடி அளவில் கடனில் சிக்கித் தவிக்கிறது. வங்கிகள் உட்பட 28 நிறுவனங்கள் இந்த கடனை வழங்கியுள்ளன. கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கான ஊதியத்தையும் டெக்கான் குரோனிக்கல் கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த அணியை விற்பனை செய்ய டெக்கான் சார்ஜர்ஸ் முடிவு செய்து விளம்பரம் செய்தது. இதற்கான ஏலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று சென்னையில் நடத்தப்பட்டது. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கான அடிப்படை விலையாக ரூ750 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க ஆந்திராவின் பிவிபி நிறுவனம், வீடியோகான், கோயங்காவின் ஆர்பிஜி குரூப், ஜேப்பீ குரூப், பீப்பிள் கேப்பிடல், அதானி குழுமம் என பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டன. ஆனால் டெக்கான் சார்ஜர்ஸின் கடன் சிக்கலை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் பெரும்பாலான நிறுவனங்கள் கழன்று கொண்டன.
கடையில் ஆந்திராவின் பிவிபி நிறுவனம் மட்டும்தான் போட்டியில் இருந்தது. தற்போது அந்த நிறுவனமே டெக்கான் சார்ஜர்ஸை ரூ900 கோடிக்கு வாங்க முன் வந்திருந்தது. ஆனால் இந்தத் தொகை போதுமானது அல்ல என்று டெக்கான் குரோனிக்கல் நிறுவனம் கூறியது. ஆனால் பிவிபி நிறுவனம் இதை நிராகரித்தது. இதனால் இன்றைய ஏலம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பி. சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் மறு ஏலம் நடத்தப்படும் என்றும் கூடுதல் தொகை கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு பிவிபி நிறுவனத்திடம் பேச இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த குளறுபடிக்கு வரும் 15-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொட்லூரி வர பிரசாத் என்கிற பிவிபி குழுமம்தான் அண்மையில் வெளியான நான் ஈ திரைப்படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.