நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் தகவல் வெளியானது. இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிலக்கரியை வெட்டி எடுக்காத 29 தனியார் ஒதுக்கீடுதாரர்களிடம் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை விளக்கம் கேட்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலாளர் ஜோஹ்ரா சாட்டர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சகங்களுக்கிடையிலான குழு கடந்த 10 நாள்களாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், 12 சுரங்க உரிமங்களை ரத்து செய்யவும், 13 சுரங்கங்களின் வங்கி உத்தரவாதத்தைத் திரும்பப் பெறவும் அமைச்சகங்களிடையேயான குழு பரிந்துரை செய்துள்ளது. இதுவரை 29 உரிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட சுரங்கங்களில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் ருங்தா மைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான சுரங்கங்களும் அடங்கும். மொத்தம் உள்ள 58 சுரங்கங்களில் மற்ற 29 சுரங்கங்கள் அரசுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 வழக்குகள்
இதனிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விகாஷ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது.