சகாரா இந்தியா குரூப்பை சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீடு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை திரட்டியது. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சகாரா நிறுவனங்களுக்கு எதிராக இந்திய பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு வாரியம்(எஸ்.ஈ.பி.ஐ), உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த மாதம் 31ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்குமாறு உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட முதலிட்டாளர்களுக்கு 15 சதவீதம் ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். 3 மாதங்களில் சகாரா நிறுவனம் நிதியை திரும்ப அளிக்காத பட்சத்தில் சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
முதலீட்டாளர்களிடம் பெற்று கொண்ட ஆவணங்களையும் சகாரா நிறுவனங்கள் திரும்ப அளிக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வாலை, உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சகாரா குரூப் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றப்பட்ட நிதியை சகாரா குரூப் திரும்ப அளிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து அது குறித்த விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.