ஏசி வகுப்புகளுக்கான ரயில் சேவை வரி 3 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் வகுப்பு ஏசி பெட்டி, எக்சிகியூட்டிவ் வகுப்பு, ஏசி 2 டயர், ஏசி 3 டயர், ஏசி சேர் கார் மற்றும் சரக்குக் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளன.
ஏசி முதல் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு பயணிகள் கிட்டத்தட்ட 20 சதவீத கட்டண உயர்வை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை வரி உயர்வால் ரயில்வே துறைக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 3000 கோடி வருமானம் கிடைக்கும்.
இதுவரை ரயில் பயணிகளுக்கு முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் கட்டணம் மட்டுமே விதிக்கப்பட்டது. முதல் முறையாக உயர் வகுப்பு ரயில் பயணிகளுக்கு சேவை வரியாக 3.7 சதவீதம் வசூலிக்க ரயில்வே துறை முடிவு செய்து அதை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதனால் ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு ஏ.சி., 3 அடுக்கு ஏ.சி. கட்டணம் உயர்ந்தது. சேவை வரி கட்டணம் உயர் வகுப்பு பயணிகளுக்கு வசூலிக்கப்படுவதால் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ. 30 முதல் உயர்ந்துள்ளது. 2 அடுக்கு படுக்கை குளிர்சாதன வசதி கட்டணம் ரூ. 50 முதல் வரையிலும் 3 அடுக்கு படுக்கை ஏ.சி. கட்டணம் ரூ. 30 முதல் வரையிலும் உயர்ந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தாலும் 4 மாதத்திற்கு முன்பு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணத்தை பயணத்தின்போது செலுத்த வேண்டும்.
ஏற்கனவே விமான பயணத்திற்கு சேவை கட்டணம் உள்ளது. அதுபோல உயர் வகுப்பு ரயில் பயணிகளுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, பெங்களூர், கோவை போன்ற இடங்களுக்கு செல்வதற்கான கட்டணம் அடிப்படை ரயில் கட்டணத்தில் இருந்து மாறுபட்டுள்ளது.
பயணிகள் ரயில்களைப் போலவே சரக்கு ரயில்களிலும் கூட சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெட்ரோலியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.