நாமக்கல் மண்டலத்தில் உள்ள 300 கோழிப்பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக சுமார் 3 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர தினசரி 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
தேவை அதிகரித்ததை அடுத்து நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த மாதம் உயர்ந்தது. ஒரு முட்டை சில்லரை விலையில் 3ரூபாய் 65 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலோனோர் சைவத்திற்கு மாறி முட்டை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் சத்துணவுக்கு அனுப்பப்டும் முட்டையிலும் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் முட்டை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் முட்டை கொள்முதல் விலை கடந்த மாதம் 24-ந் தேதி 10- காசுகள் குறைத்து ரூ. 3.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
வியாழக்கிழமையன்று மேலும் 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது குறித்து நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் செல்வராஜ் கூறியதாவது :
புரட்டாசி மாதம் காரணமாக நாமக்கல் மண்டல முட்டை விற்பனையில் 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6 கோடி முட்டைகள் வரை தேங்கியிருக்கும். ஆனால் இப்போது 12 கோடி முட்டைகள் வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ஐதராபாத், மண்டலத்திலும் முட்டை விலை குறைந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விற்பனை சரிந்து தேக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் செல்வராஜ் கூறியுள்ளார்.