நாகர்கோவில் : கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் இருந்து நாகர்கோவில், கோவா வழியாக மும்பைக்கு குளிர்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நெல்வேலி-மும்பை வாராந்திர சிறப்பு ரயில் நெல்வேலியில் இருந்து (ரயில் எண்: 01068), ஒவ்வொரு திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், மங்களூர், கோவா வழியாக செவ்வாய் இரவு 11:45 மணிக்கு லோக்மானிய திலக் (மும்பை) சென்று சேரும்.
அதேபோல மறுமார்க்கத்தில் லோகமான்ய திலக்(மும்பை) இருந்து ( ரயில் எண்: 01067) சனிக்கிழமை மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு திங்கட்கிழமை அதிகாலை 5:55 மணிக்கு வந்து சேரும்.
சிறப்பு ரயில் நாகர்கோவிலிருந்து 33 மணி 25 நிமிடங்களில் மும்பைக்கு போய் சேருகிறது. சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து வரும் டிசம்பர் மாதம் 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மும்பை மார்க்கத்திற்கு புறப்பட்டு செல்லும். அதேபோல டிசம்பர் மாதம் 15, 22, 29 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வரும்.
சிறப்பு ரயிலில் குளிர்சாதன இரண்டு அடுக்கு ஒரு பெட்டியும், குளிர்சாதன 3 அடுக்கு 2 பெட்டியும், படுக்கை வசதி கொண்ட 19 பெட்டிகள் மற்றும் 3 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும் இருக்கும்.