தமிழகத்தின் தற்போதைய மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட் ஆகும். ஆனால் மாநிலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் 4 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பகிர்ந்து அளிக்கும் வகையில், மாநிலத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது.
சென்னையில் 1 மணிநேரமும், மற்ற மாவட்டங்களில் பல மணிநேரங்களும் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகள், சிறு மற்றும் குறுத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரை வீசிய காற்றின் மூலம் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் நடைபெற்றது. இதனால் மாநிலத்தின் மின்தேவை ஒரளவுக்கு பூர்த்தியானது. ஆனால் தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால், மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந் நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை போக்க, வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் புதிய அனல்மின் திட்ட பணிகளை வேகமாக முடிக்க தமிழக மின் வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் கொண்ட ஒரு யூனிட்டில் சோதனை ஓட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தற்போது 300 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. விரைவில் இங்கு மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல வல்லூரில் 1,500 மெகா வாட் கொண்ட யூனிட்டில் விரைவில் மின் உற்பத்தி துவங்க உள்ளது. வடசென்னையில் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்களில் மின் உற்பத்தி விரைவில் துவக்கப்பட உள்ளது. மேற்கண்ட மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் அடுத்த மாதம் இறுதியில் 1,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் தடை நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பேச்சு இதை உறுதி செய்துள்ளது. அவர் கூறுகையில், மேட்டூர், வல்லூர், வடசென்னையில் உள்ள யூனிட்கள் மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் 1,000 மெகாவாட் கிடைத்தால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மின்தடை பிரச்சனையே இருக்காது என்றார்.