இன்னும் 15 நாளில் தீபாவளி வருகிறது. இதனால் ஜவுளி வாங்குவது, பொருட்களை வாங்குவது என மக்கள் பிசியாகி வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு விலை விவரம் மக்கள் வயிற்றியில் கந்தகத்தை காய்ச்சி ஊற்றுவது போல உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது பட்டாசுகள்.
தீபாவளி என்றால் சின்னதாக ஒரு குருவி வெடியாவது விட்டால்தான் அது திருப்தியாக முடியும். எனவே பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. ஆகையால் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதே பட்டாசு விற்பனை பல இடங்களில் தொடங்கி விட்டது. மக்களும் வெடிகளை வாங்கி வெடிக்கவும் ஆரம்பித்து விட்டனர். இடையில் மழை பெய்து வந்ததால் பட்டாசு விற்பனை மக்கிப் போய் இருந்தது. தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆனால் கடைகளுக்குப் போய் விலையைப் பார்த்தால் மயக்கம்தான் வருகிறது.
வழக்கம் போல இந்த முறையும் ஏகப்பட்ட புதிய ஐட்டங்களை இறக்கியுள்ளனர். குறிப்பாக விதம் விதமான பேன்சி ரக பட்டாசுகள்தான் மக்களை ஈர்ப்பதாக உள்ளது. ஆனால் விலையும் கூடுதலாகவே இருக்கிறது.
சாதாரண கம்பி மத்தாப்பின் விலையே கடுமையாக இருக்கிறது. அதேபோல குருவி வெடி, ஜம்போ வெடி, லட்சுமி வெடி ஆகியவற்றின் விலையும்
கடுமையாக உயர்ந்துள்ளது.
அணுகுண்டும் விலை உயர்ந்தே காணப்படுகிறது. கைகளில் பிடித்து சரமாரியாக வெடித்துத் தள்ளும் சரவெடி கெட்ட கெட்டுக்கு அதுவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. தெளசன்ட் வாலா சரவெடியின் விலை ரூ. 500க்கு மேல் உள்ளது. அதிகபட்சம் ரூ. 5000 வரை சரவெடிகள் உள்ளன.
குறைந்தது ரூ. 50 முதல் 150 வரை விலை உயர்ந்து காணப்படுவதால், முடிந்தவரை சின்ன அளவில் வாங்க வேண்டியதுதான் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனர்.
மொத்த விலைக் கடைகளிலேயே இந்த விலை என்பதால், சில்லரை விலைக் கடைகளில் இதை விட டபுள் மடங்கு விலை இருக்கும் என்று மக்கள் ஆயாசப்படுகின்றனர்.