ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் இந்திய வர்த்தகர்கள் ஷார்ஜா அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு நேற்று எற்பாடு செய்திருந்தது.
இந்திய தூதர் எம்.கே.லோகேஷ், ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் அஹமது முஹம்மது அல் மித்ஃபா மற்றும் இந்திய கன்சல் ஜெனரல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். எம்.கே. லோகேஷ் தனது உரையில், இந்திய தூதரகம் அமீரகத்துடனான வர்த்தகம் விரிவடைய இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்துக்கு அனைத்துவிதமான ஒத்துழைப்பினையும் நல்கும் எனக் குறிப்பிட்டார்.
ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் அஹமது முஹம்மது அல் மித்ஃபா கூறுகையில், இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான வர்த்தகம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இருவரும் இணைந்து செயல்பட்டால் இன்னும் பல சாதனைகளைப் படைக்க இயலும் என்றார்.
இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய தலைவர் சுதேஷ் அகர்வால் இந்திய மற்றும் அமீரகம் இடையேயான வர்த்தக முன்னேற்றத்துக்கு இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் முக்கியப் பங்காற்றி வருவதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து ஷார்ஜா அரசு அதிகாரிகளுடன் இந்திய வர்த்தகர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய டைரக்டர் ஜெனரல் பிரியா, தொழிலதிபர்கள் ராம் புக்ஷானி, பரத்பாய் ஷா, கே.வி. ஷம்சுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இந்திய வர்த்தக கவுன்சில் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஷார்ஜா எக்ஸ்போவுடன் இணைந்து ஏப்ரல் 2014ல் இந்திய வர்த்தக கண்காட்சியினை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.