கூட்டுக் குடும்பத்தில் வசித்து பின்னர் தனியாக குடித்தனம் போவோர், புதிதாக திருமணமாவோர் என்று நாளுக்கு நாள் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், சமையல் எரிவாயு இணைப்பு கேட்போரின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இன்றைய தேதிக்கு 50,000 பேர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துக் காத்துள்ளனராம். இதில் இன்டேன் நிறுவனத்திடம் மட்டும் 30,100 பேர் இணைப்பு கேட்டுள்ளனர். பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திடம் 20,000 பேர் புதிய இணைப்பு கேட்டுள்ளனர்.
ஆனால் புதிய இணைப்புகளை வழங்குவதில் பெரும் தாமதம் காட்டுகிறார்கள் இந்த எண்ணெய் நிறுவனங்கள். காரணம் வெளிச் சந்தையில் கேஸ் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விநியோகஸ்தர்கள் விற்று காசு பார்த்து வருவதே.
மேலும் புதிய இணைப்புக்கு வணிக ரீதியிலான சிலிண்டரின் விலையை வினியோகஸ்தர்கள் நிர்ணயித்து கூடுதல் தொகை பெறுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
எத்தனை நாட்களுக்குள் புதிய இணைப்பு கிடைக்கும் என்பது பற்றி வினியோகஸ்தர்கள் தெரிவிப்பது இல்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரிள் கூறும்போது, புதிய இணைப்பு தாமதத்திற்கு காரணம், விண்ணப்பதாரர்கள் கொடுத்த தகவல்கள் சரியானதுதானா? ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு சிலிண்டர் இணைப்பு உள்ளது. ஒரே பெயரில் ஒரே முகவரியில் 2 இணைப்புகள், வெவ்வேறு பெயர்களில் ஒரே முகவரியில் உள்ள இணைப்புகள் குறித்து ஆய்வு செய்த பிறகுதான் புதிய இணைப்பு வழங்கப்படும்.
பல்வேறு கட்டங்களாக நடக்கும் இந்த ஆய்வின் முடிவில் விண்ணப்பதாரர் பெயரில் இணைப்புகள் இருக்குமானால் புதிய இணைப்பு கிடைக்காது. முறையான விண்ணப்பதாரர்களுக்கு புதிய இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்ததில் ஏற்பட்ட தாமதத்தால் இணைப்பு தாமதமானது. தற்போது புதிய கேஸ் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.