மத்திய மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கோர் பேங்கிங் சேவை மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.
விவசாயக்கடன் 70 %
வேளாண் துறைக்கு அதிக அளவில் கடன் வழங்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் நிதி ஆண்டில் விவசாயக் கடன் இலக்கை ரூ.7 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாகும்.
மூலதன இருப்பு
மேலும், மூலதன இருப்பு விகிதத்தை 4 சதவீதமாக அதிகரித்துக் கொள்ளும் வகையில் உள்வள ஆதாரங்களிலிருந்தும், வெளியிலிருந்தும் நிதி திரட்ட வேண்டும் என ஆணையிட்டுள்ளது. இதற்கான இறுதி தேதி மார்ச் 31 ஆகும்.
நிதி திரட்டும் நடவடிக்கையில் கூட்டுறவு வங்கிகள் நிலையான வட்டியில் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட முதிர்வு கொண்ட டெபாசிட்டுகளை திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ்வகை டெபாசிட்டுகளை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் திரும்ப பெற இயலாது. மேலும் இத்தகைய டெபாசிட்டுகளை முதல் நிலை மூலதனமாக கருதலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.