தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய போது, தமிழ்நாடு அரசு ஓய்வூதியாதரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அரசு அலுவலர்களுக்கு உள்ளது போலவே ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவினங்களை ஈடுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டத்தை வரும் நிதியாண்டில் இந்த அரசு தொடங்கும். வரும் நிதியாண்டிலிருந்து அகதிகள் முகாம்களுக்கு வெளியில் வசிக்கக் கூடிய அகதிகளுக்கும் முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் அளிக்கப்படும். நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு வங்கி கணக்குகள் மூலமாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் முறை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
35 லட்சம் மிக்சி, கிரைண்டர்
அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம் இந்த ஆண்டு விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும்திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும். இந்த நிதியாண்டில் ரூ.359.70 கோடி செலவில் 14,130 மதிய உணவு மையங்களில் சமையல் அறை, இருப்பு அறைக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்படும். பொது மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் வழங்கும் திட்டத்திற்காக இந்த நிதியாண்டு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் 35 லட்சம் குடும்பங்களுக்கு இவை வழங்கப்படும்.
ரூ56.34 கோடிக்கு மிதி வண்டிகள்
குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் வீட்டு வசதி தேவைகளை நிறைவு செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் இணைந்து பல்வேறு திட்ட நிதிகளை பயன்படுத்தி 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகளை மேற்கொள்ளும். இத்துடன் தற்போதுள்ள குடிசை பகுதிகளையும் மறு மேம்பாடு செய்யும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க இந்த ஆண்டு ரூ.56.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் ஆதிதிராவிடர் துணை திட்டத்திற்கு 7042 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஓரளவு குடிநீர் வசதி பெற்றுள்ள 6000 ஊரக குடியிருப்புகளுக்கும் குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ள 195 குடியிருப்புகளுக்கும் தேசிய ஊரக குடிநீர் வழங்கும்திட்டம், அடிப்படை தேவைகள் திட்டம் மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் ரூ.1190.72 கோடி செலவில் குடிநீர் வசதிகள் அளிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நடப்பு நிதியாண்டில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் 103 கோடி ரூபாய் 287 பேரூராட்சிகளில் உள்ள 426 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். முதலமைச்சர் அறிவுறுத்தியவாறு நிதி திறன் வலுவாக இல்லாத நகராட்சிகளில் திட கழிவு திட்ட பணிகளை செயல்படுத்த இந்த ஆண்டு சிறப்பு திடக்கழிவு மேலாண்மை நிதி ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும்.
ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் உயர்வு
மாநில சிறப்பு நோக்கு திட்டங்கள் அடிப்படையில் சென்னை பெருநகர் மேம்பாட்டு திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.750 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி 1.4.2013லிருந்து 132 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.