ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, டாடா கன்சல்டன்சி சந்திரசேகர் உள்ளிட்ட பெரும் தொழில்நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை இன்று மும்பையில் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது மேற்கு வங்கம் முதலீடு செய்ய உகந்த தன்மையுடனும், சிறப்பான பணிச்சூழலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாற்பதுக்கும் மேற்பட்ட துறையைச் சார்ந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களுடன் பேசும் போது மம்தா இதற்குமுன் வேலை நிறுத்தங்களால் தொழில்துறை பாதிக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் வேலை நிறுத்தங்கள் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
10,000 ஏக்கர் நிலம்
பணிச்சூழல் தற்போது செம்மையாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், வேலை நிறுத்தங்களை ஆதரிக்கவில்லை எனவும், தொழில்வழங்குனர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வதாகவும் குறிப்பிட்டார். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கொள்கைகள் தெளிவாக வரையப்பட்டு, 10,000 ஏக்கர் அளவிலான நிலம் தொழில் தொடங்க ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்குர் நிலத்தகராறு
சிங்குர் நிலத்தகராறு தொடர்பான கருத்து கூற மறுத்துவிட்ட மம்தா, நீதிமன்ற விசாரைணையின் கீழ் இருக்கும் அப்பிரச்சனையில் தொழில்வழங்குனர்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்
சிங்குர் பிரச்சனை தொடர்பான அவருடைய செயல்கள் பெருமை அளிப்பதாக கூறிய மம்தா, தொழில்துறை மற்றும் விவசாயிகளுக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும், இருதுறையினரும் மகிழ்ச்சி அடையும் தருணம் ஏற்படும் என குறிப்பிட்டார்.
டாடா குழுமம்
டாடா கன்சல்டன்சி சந்திரசேகர் கூட்டத்தில் கலந்து கொண்டதை செய்தியாளர்களிடம் நினைவுபடுத்திய மம்தா, ஷாபூர்ஜி பல்லோஞ்சி மற்றும் பெரும்பான்மை பங்குகளை கொண்ட டாட்டா சன்ஸ் நிறுவனம் 20,000 வீடுகளை கட்டித்தரும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததையும் குறிப்பிட்டார்.
சிங்குரில் டாட்டா குழுமத்தின் நானோ கார் தயாரிக்கும் திட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பே, மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயர காரணம் என்பது நினைவிருக்கலாம்.
முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள்
ஐசிஐசிஐ யின் சாந்தா கோச்சர், கோடக் மகிந்திரா வங்கியின் உதய் கோடக், சஞ்சீவ் கோயங்கா, ஹார்ஷ் கோயங்கா, ஹிந்துஸ்தான் யுனிலீவரின் நிதின் பரஞ்ச்பே, சஜ்ஜன் ஜிண்டால், ITCயின் தேவேஷ்வர் மற்றும் அசோக் ஹிந்துஜா உட்பட்டோர் இக்கூட்டத்தில் பங்குபெற்றனர்.
மேற்கு வங்கம் ஒரு "தங்க சுரங்கம்"
தன்மாநிலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பட்டியலிட்ட மம்தா, முகேஷ் அம்பானி சந்திப்பின் போது மேற்கு வங்கத்தை "தங்க சுரங்கம்" என வர்ணனை செய்ததாக குறிப்பிட்டார்.
நிதிஅமைச்சர் அமித் மித்ரா
மேற்குவங்க நிதிஅமைச்சர் அமித் மித்ராவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். எவ்வளவு முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கு பற்றி எதுவும் கருத்து சொல்லாத மம்தா, தொழில் அதிபர்களிடம் தன் நிலைமையை எடுத்துக்கூறியதாகவும், பின்னர் அவர்கள் திட்டங்களை தயார்செய்வார்கள் என குறிப்பிட்டார்.
எந்தெந்த இடங்களில் தொழில் தொடங்கலாம் என்ற தகவல்களை தாம் வெளியிட்டதாகவும், முதலீட்டாளர்கள் இடங்களை முடிவு செய்வதாகவும் குறிப்பிட்ட அவர், முதலீடுகள் வரும் என நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
உள்ளாட்சி தேர்தல்களில் 80% இடங்களை வென்றது
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பற்றிய , குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வந்த செய்திகளில் உண்மை இல்லை என மறுத்த மம்தா, அவ்வாறு வெளிவந்த செய்திகளில் உண்மை இருக்குமாயின் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் தனது கட்சி எவ்வாறு 80 விழுக்காடு இடங்களை வென்றது சாத்தியமானது என கேள்வி எழுப்பினார்.
அவருடைய அரசாங்கம் கொல்கத்தாவில் நிதிசார் மையம் ஏற்படுத்த திட்டம் வகுத்திருக்கிறது எனவும், அங்கே உலக வர்த்தக நடுவம் நிறுவப்படும் என தெரிவித்தார்.