ஜெர்மனி: சீமென்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அந்நிறுவனம் செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜெர்மனியில் உள்ள அந்நிறுவனத்தின் சுமார் 15,000 தொழிலாளர்களைக் பணிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த நடவடிக்கையின் முலம் 6 பில்லியன் யூரோ( 8.1 பில்லியன் டாலர்கள்) செலவை குறைக்க முடியும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஞாயிற்றுகிழமை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில், சேமிப்பு திட்டத்தை உருவாக்கிய தலைமை நிர்வாகி பீட்டர் லோஷர் நிறுவனத்தை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மருத்துவ கருவிகள் முதல் எரிவாயு டர்பைன்கள் வரை உற்பத்தி செய்யும் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனமான சீமென்ஸ், அமெரிக்காவை மையமாக கொண்ட ஜெனரல் எலக்ட்ரிக் கம்பனி மற்றும் சுவிச்சர்லாந்தின் ஏபிபி நிறுவனம் போன்றவற்றை விட அதிகளவு லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.
இந்த நடவடிக்கையின் முதல் பகுதியாக பாதி ஊழியர்களை குறைப்பதற்கு சீமென்ஸ் மற்றும் அதன் தொழிற்சங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன, மீதமுள்ள நடவடிக்கை தொடரும் எனவும் செய்தி தொடர்பாளர் கூறினார்.
இதுவரை எந்த தொழிலாளர்களும் பணி நீக்கம் செய்யப்படவில்லை, பணி நீக்கம் செய்யும் நோக்கமும் இல்லை, மாறாக தன்னார்வ பணிவிடுப்பு ஒப்பந்தம் மூலம் இதை செயல்படுத்த விரும்புகிறது எனவும் சீமென்ஸ் கூறியது.
ஜெர்மனியிலுள்ள இதன் தொழில்துறை பிரிவில் 2000 ஊழியர்களும், எனர்ஜி மற்றும் உள்கட்டமைப்பு வணிக துறையில் 1400 ஊழியர்களும் குறைக்கப்படுவார்கள் என நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
கடந்த ஆண்டு போலவே நடப்பு நிதியாண்டிலும் 3,70,000 ஊழியர்களுடன் நிறைவு செய்யும் என சீமென்ஸ் எதிர்பாக்கிறது.