மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரிப்போ விகிதங்களை (வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான விகிதங்கள்) சுமார் 25 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தி, வங்கிகளுக்கான மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதியை 25 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை எப்படியேனும் குறைக்கும் நோக்கிலேயே, ரிப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தின் போது டபிள்யூபிஐ (WPI) பணவீக்கம், ஆச்சரியமூட்டும் வகையில், எதிர்பார்க்கப்பட்ட 6 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக சுமார் 6.46 சதவீதத்தை எட்டியிருக்கிறது.
ஏற்கெனவே வளர்ச்சியை பாதித்திருந்தாலும், பணவீக்கத்தை எதிர்த்துப் போராட முனையும் தன் நோக்கத்தை ஆர்பிஐ மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
"மொத்த விற்பனை விலை இன்டெக்ஸ் (டபிள்யூபிஐ) மூலம் அளவிடப்படும் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தின் போது தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிறக்கத்தை ஈடு செய்ய, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவது, அதிகரிக்கப்பட்டிருக்கும் உணவு மற்றும் எரிபொருள் வீக்கம் ஆகியவற்றுடன் ஒன்றாக சேர்ந்து குறைந்த வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய விலைவாசி இறக்கத்தை ஈடு செய்கின்றது. கரீஃப் பயிரின் அறுவடை மற்றும் வழக்கமான பருவகால மாற்றங்கள் ஏற்பட்டால் உணவுப் பொருட்களின் விலை மீதான அழுத்தம் குறையவும் வாய்ப்புள்ளது. அதே சமயம், வருடத்தின் எஞ்சியுள்ள மாதங்களில் டபிள்யூபிஐ பணவீக்கம் தற்போதிருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.