மும்பை: முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதனுடைய KG-D6 தளத்தில் அரசு எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி செய்யாததால், இதுவரை, கடந்த மூன்று வருடங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை அபராதமாக செலுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையை விசாரித்து வரும் நடுவர் குழுவின் முடிவு தெரியும் வரை, ஒவ்வொரு வருடமும் மொத்த செலவுகளைக் கம்பெனி பணத்திலிருந்து திருப்பி எடுத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரபல வர்த்தக நாளிதழின் அறிக்கை கூறுகிறது.
மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவில் வெளிநாட்டவர் ஒருவர் இடம் பெறலாமா, இடம் பெறக் கூடாதா என்ற விவாதத்தில் அரசுத் தரப்பும் ரிலையன்ஸ் நிறுவனமும் முட்டிக் கொண்டதால் விசாரணை தடைப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இது தவிர, ரிலையன்ஸ் நிறுவனம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை 135 மில்லியன் டாலர் பணத்திற்கு வங்கி மூலம் மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்றும், மேலும் தன்னுடைய KG-D6 தளத்தில் எரிபொருளைப் பதுக்கினால் அந்த உத்தரவாதப் பணத்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்றும் இதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டால்தான் அதனுடைய D1 மற்றும் D3 தளங்களில் எரிபொருள் விலையை உயர்த்த அனுமதி வழங்கப்படும் என்று எண்ணெய் அமைச்சகம், பாராளுமன்றத்தில் அமைச்சரவைக் குறிப்பு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவைவிட குறைவாகவே KG-D6 பிளாக்கில் எரிபொருள் உற்பத்தி செய்து வந்ததால் இந்நிறுவனத்தின் மற்ற பிளாக்குகளின் எரிபொருள் விலையைக் கூட உயர்த்துவதற்கு எண்ணெய் அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் 2014 முதல் ஒரு mBTU-வுக்கு (மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) 8.4 டாலர் அளவு, அதாவது இரு மடங்காக உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கலாம் என்று பரிசீலித்து வருகிறது.
"இந்தியப் பணியாளர்களையும், இந்தியாவின் இயற்கை வளங்களையும் பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், ஒரு இந்திய நிறுவனத்துக்கு ஏன் அமெரிக்க டாலர்களில் விலையும், விலை உயர்வையும் நிர்ணயிக்க வேண்டும்?" என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது அல்லவா? அது நமக்கெல்லாம் புரியாது பாஸ் விட்டுடுங்க.