மும்பை: டாடா பவர் நிறுவனம், சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையில் (renewable energy) ஆண்டுக்கு 260 மில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்தது. இப்பெரும் முதலீட்டைக் கொண்டு காற்றாலையை கையகப்படுத்தவும், மின் உற்பத்தியை மேம்படுத்த முடிவு செய்தது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக மேற்கு குஜராத்தில் பகுதியில் செயல்பட்டு வரும் காற்றாலைகளை AES கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தியுள்ளது டாடா பவர் நிறுவனம்.
'டீ' யிலிருந்து டெலி-கம்யூனிகேஷன் வரை உள்ள அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி பெற்ற டாடா குழுமம், வருவாய் ஈட்டுவதில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய குறியீட்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படையில், தெர்மல் மின் நிறுவனமாக இருந்தது ஆனால் இப்பொழுது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் கால்பதிக்கும் டாடா பவர் நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும்
மின் உற்பத்தி இலக்கு!!!
ஒவ்வொரு ஆண்டும் காற்றாலைகள் மூலம் 150 முதல் 200 மெகாவாட் மின்சாரமும், சூரிய ஒளி கதிர்கள் மூலமும் 30 முதல் 50 மெகாவாட்டும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
டாடா-வின் அதிர்ஷ்டம்
"குஜராத்தில் 39.2 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள காற்றாலையை நாங்கள் வாங்கியதையடுத்து, இந்தத் தொழிலிலிருந்து 'ஆளை விடுறா சாமி' என்று வெளியேற விரும்பும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளை எங்களுக்கு விற்க ஆர்வம் தெரிவித்துள்ளதால் அவற்றை வாங்குவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்று டாடாவின் இந்திய வணிகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத் துறையின் முதன்மை அதிகாரியான ராகுல் ஷா தெரிவித்தார்.
நிலக்கரி, எரிவாயு பற்றாக்குறை
நிலக்கரி மற்றும் எரிவாயு பற்றாக்குறையினாலும், நிர்ணயிக்கப்பட்ட குறைவான விலைகளாலும் தெர்மல் மின் உற்பத்தி தொழிலே 'ததிங்கிணத்தோம்' போடுவதாலும், மின்சாரத்தை சார்ந்து பொருளாதாரம் இயங்குகிற காரணத்தினாலும் டாடா மற்றும் வெல்ஸ்பன் நிறுவனங்கள் புதுபிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையின் பக்கம் தங்கள் முழுகவனத்தையும் திருப்பியுள்ளன. ("என் வழி தனி வழி"!!)
லாபம் குறைவுதான்
தெர்மல் மின் உற்பத்தி மூலம் 20 முதல் 30 சதவீத இலாபம் கிடைத்து வரும் நிலையில், மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையில் 12 முதல் 18 சதவீதம் இலாபமே கிடைக்கிறது. இருந்த போதிலும், இந்தத் துறை நிலையான, நம்பகமான இலாபம் தரும் துறையாக வளர்ந்து வருகிறது.
இடம் பற்றாக்குறை
இத்திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களினாலும், மோசமாக நடைமுறைப்படுத்தப்படும் அரசின் கொள்கை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்கள் ('ஜவ்வு'மாதிரி) இழுத்துக் கொண்டே போகிறது என்றும் ராகுல் ஷா வருத்தம் தெரிவித்தார்.
நிறுவனங்கள் கைப்பற்ற திட்டம்
தற்போது காற்றாலை மூலம் 400 மெகாவாட்டும், சூரிய ஒளி கதிர்கள் மூலம் 30 மெகாவாட்டும் உற்பத்தி செய்துவரும் டாட்டா நிறுவனம் இந்த மார்ச் மாதத்துடன் மேலும் 370 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் அளவுக்குப் புதிய நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. (ஆல் தீ பெஸ்ட் டாடா!)
55,000 மெகாவாட் இலக்கு
இந்தியா, மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் துறையின் மூலம் 2017-க்குள் 55,000 மெகாவாட் உற்பத்தி இலக்கு நிர்ணயித்துள்ளது , இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே 27,000 மெகாவாட் அளவை எட்டியுள்ளது.
12.5% மட்டும்
இந்தியாவின் ஒட்டுமொத்த மின்தேவையில் 12.5 சதவீதத்தை மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்துறை வழங்குகிறது என்று அத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.