டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவியான நிர்பயாவின் கொலை மற்றும் கற்பழிப்பின் பிறகு நாடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இந்திய நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது என அரசு உணர்ந்தது.
அதன் விளைவாக மத்திய அரசு இந்த மருத்துவ மாணவின் பெயரைக் கொண்டு நிர்பயா நிதி திட்டம் என உருவாக்கியது. இத்திட்டத்தின் மூலம் இந்திய பெண்களின் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளை மத்திய அரசு செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு கட்டமாக திங்களன்று, சுமார் 1,000 கோடி ரூபாய் கொண்டு சிறப்பான உபயோகத்துக்கான புதிய திட்ட அறிக்கையை அறிமுகம் செய்தார் ப.சிதம்பரம்.
மேலும் கூறுகையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறுகையில், "பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு மிக சொற்பமான கால அவகாசத்தில் காவல்துறை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அபாய எச்சரிக்கை விடுக்க ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். இந்த பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எஸ்ஓஎஸ் எச்சரிக்கை செய்தியை மொபைல் முலம் காவல் துறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இந்த எச்சரிக்கைபட்டனை, மொபைல் உற்பத்தியாளர்கள் தங்கள் ஃபோன்களில் அறிமுகப்படுத்த வேண்டியதிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பெண்களின் பாதுகாப்புக்கென அரசாங்கம் எடுத்து வரும் இதர பல முயற்சிகளையும் அறிவித்துள்ளார். இந்த 1000 கோடி ரூபாய் நிதி, பொது போக்குவரத்து வாகனங்களில் குளோபல் பொஸிஷனல் சிஸ்டம் (ஜிபிஎஸ்) சாதனம் மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்றவற்றைப் பொருத்துவதற்கும், இரயில்களில் எஸ்ஓஎஸ் எச்சரிக்கை சாதனத்தை அறிமுகப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படவுள்ளது. மேலும் இரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவை பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பான தனித்தனி கேபினெட் குறிப்புகளை சமர்ப்பித்து, அவற்றை செயல்படுத்த உள்ளதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
"கேபினெட் குறிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன... மூன்று அமைச்சகங்களும் தத்தம் திட்ட அறிக்கைகளை வரும் வியாழன் அல்லது அடுத்த வியாழனன்று சட்டகபைக்கு கொண்டு வரவுள்ளன," என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
ஐடி மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் மற்றும் காவல்துறை ஆகியோருடன் கலந்தாலோசித்த பின், உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள செயல்திட்டமானது, எதிர்தாக்குதல் நடத்த குறைந்தபட்ச கால அவகாசமே உடையதொரு இக்கட்டான நிலையில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய ஃபோன்கால்களை ட்ரேஸ் செய்வதன் மூலம், உடனடி நடவடிக்கை எடுத்து தக்க சமயத்தில் சென்று அவர்களைக் காக்க உதவும் வகையில், நாடெங்கிலும் செயல்பட்டு வரும் ஃபோன் நெட்வொர்க்குகளுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது.
"இத்திட்டம் சுமார் 157 நகரங்களில் இரண்டு கட்டங்களாக (முதல் கட்டமாக 55 நகரங்களும், இரண்டாவது கட்டமாக 102 நகரங்களும்) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான செலவீடு சுமார் 1,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
சாலை போக்குவரத்து அமைச்சகம், சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கக்கூடிய 32 நகரங்களை உள்ளடக்கியதான "நாட்டின் சாலை போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு" என்ற புதிய திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு சுமார் இரண்டு வருட காலம் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனை செயல்படுத்துவதற்கு சுமார் 1,700 கோடி ரூபாய் செலவு பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரம் அவர்கள், டெல்லி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக சுமார் 1,000 கோடி பெறுமானமுள்ள நிர்பயா நிதியை 2013-14 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை பாதுகாக்கும் வண்ணம் அவர் நிர்பயா (பயமற்றவர்) என்ற புனைப்பெயரில் குறிப்பிடப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, அரசாங்கம் நிர்பயா நிதியை தகுந்த முறையில் உபயோகிக்க முயற்சிக்கவில்லை என்று பிஜேபி குற்றம் சாட்டியுள்ளது. "அரசாங்கம் இந்த நிதியை சிறப்பாக உபயோகிப்பதற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிப்பதாகத் தெரியவில்லை; ஏனெனில் இதுவரை இந்த நிதியிலிருந்து எவ்வித உருப்படியான செலவும் செய்யப்படவில்லை. இது ஒரு 1,000 கோடி ரூபாய் செயல்திட்டம், அவ்வளவே," என்று பிஜேபியின் பிரதிநிதியான மீனாக்ஷி லேகி கூறியுள்ளார்.