மும்பை: நாட்டில் வணிகத்தை பாதிக்கும் காரணிகளில் முக்கியமானது போலி பொருட்களின் வரவு. இத்தகைய போலி பொருட்களின் வருகை மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (Assocham) கூட்டமைப்பு களம் இறங்கியுள்ளது.
நாட்டில் போலி ஆடம்பர பொருட்களின் சில்லறை விற்பனை தற்போது ரூ. 2500 கோடியாக உள்ளது, அது நம்மை அசரவைக்கும் உண்மை தான். ஆனால் இத்தகைய பொருட்களின் விற்பனை 2015க்குள் இரட்டிப்பாகும், அதாவது ரூ. 5,600 கோடியை எட்டும் என்று இக்கூட்டமைப்பு கூறுகிறது. இந்த அபாயத்தினை தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள இந்திய அரசு பயனளிக்க வல்ல அறிவுசார்ந்த நடவடிக்கைகளை கட்டாயமாக்க பட வேண்டும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (Assocham) வழங்கிய அறிக்கை தெரிவிக்கின்றது.
கடுமையான சட்ட திட்டங்கள் தேவை!!
இந்த நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் போலி பொருட்களின் தேவையை குறைத்து, இருப்பை அழிக்க வழி வகைகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சட்டம் மற்றும் நீதிதுறை அமைப்பில் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ள நெளிவு சுளிவுகளை சரி செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை விகிதங்களை உயர்த்த வேண்டும் என Assocham கூட்டமைப்பு தெரிவித்தது.
கள்ள சந்தை
இது போன்ற பயன்தரவல்ல நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் கள்ள சந்தையில் போலி ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் குற்றத்தினை கட்டுபடுத்த முடியும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (Assocham ) பொது செயலாளர் டி.எஸ். ராவத் தெரிவித்தார். போலி ஆடம்பர பொருட்களின் சந்தையில் தற்போது சுமார் 2500 கோடி ரூபாய் வணிகம் நடைபெறுகிறது எனவும் அவர் அடிக்கோடிட்டு தெரிவித்தார்.
சில்லறை வியாபாரிகளுக்கு இழப்பு..
மேலும் அவர், போலி ஆடம்பர பொருட்களின் விற்பனையினால் உலகெங்கும் உள்ள அசல் பொருட்களின் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிடத்தக்க கணிசமான அளவு வருமான இழப்பினை அதாவது நட்டத்தினை சந்திக்கின்றனர். மேலும் அவர்கள் இந்த போலி ஆடம்பர பொருட்களின் வணிகத்தினால் இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தடையையும் பெருத்த பின்னடைவினையும் சந்திக்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஹெய்-டெக் முறையில் விற்பனை..
இந்தியாவில் போலி ஆடம்பர பொருட்களின் விற்பனை, அசல் பொருட்களின் விற்பனையைப் போல் இருமடங்கு அதிகம் நடைபெறுகிறது என்றும் 25 சதவீதத்திற்கு அதிகமான போலி ஆடம்பர விற்பனையாளர்கள் தங்கள் வார்த்தகத்திற்கு இணையத்தினை பயன்படுத்துகின்றனர் என்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (Assocham) ன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
45% வளர்ச்சி..
மேலும் போலி பொருட்களின் விற்பனை வணிகம் 2015ஆம் ஆண்டிற்குள், குறைந்தது 40% - 45% என்ற அளவிலான கூட்டப்பட்ட வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று எதிபார்க்கப்படுகிறது எனவும் அந்த ஆய்வறிக்கை நமக்கு தகவல் அளிக்கிறது. தற்போது நாட்டில் உள்ள விற்பனை சந்தையில் உள்ள பொருட்களின் அளவில் 5% போலி பொருட்களின் அளவு உள்ளது. இதன் மதிப்பு 8 மில்லியன் டாலர் ஆகும்.
முறையற்ற விற்பனையை குறைப்பது எப்படி..
இந்த போலி ஆடம்பர பொருட்களின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில், வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட அடையாளங்களை கொண்ட பொருட்கள் (branded products) குறித்த பயிற்சியினையும், விழிப்புணர்வினையும் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அசல் பொருட்களின் தரத்தினை வேறு எந்த போலியான பொருட்களின் தரம் ஈடு செய்ய முடியாது என்ற விழிப்புணர்வினையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியில் அசல் பொருட்களின் விற்பனையாளர்களும் ஆன்லைன் சேவை வழங்குனர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் பொருட்களின் தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கும் பொருட்டு, போலி பொருட்களின் வரவு குறித்து இணைய தளங்களில் உரையாற்ற வேண்டும் என்றும் ராவத் தெரிவித்தார்.
விற்பனை சந்தை..
விற்பனை சந்தையில் 320 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் விற்பனையில் உள்ளது. இச்சந்தையில் போலி ஆடம்பர பொருட்களின் மதிப்பு 22 மில்லியன் டாலர் ஆகும். அதாவது ஒட்டு மொத்த அளவில் 7% பங்கு.
போலிக்கு பெயர்போனது சீனா..
போலி பொருட்களில் 80% அளவிலான பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வருகின்றன என்று ராவத் கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்த பொருட்களில் பெரும்பாலும் கைப் பைகள், கடிகாரங்கள், காலணிகள், தொப்பிகள், துணிமணிகள், முக்கு கண்ணாடிகள், வாசனை திரவியங்கள் மற்றும் நகைகள் ஆகியவை அதிகம் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (Assocham) தொடங்கியுள்ள முயற்சிகள் பலனளிக்கும் என்றும் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்றும் மக்கள் உணர்வார்கள் என்றும் நம்புவோம்.