இது குறித்த கருத்துக்களைத் தெரிவிக்க அவரை தொடர்பு கொள்ள இயலவில்லையென்றாலும், டூமே கடந்த ஜுன் மாதத்தில்தான் இந்த மூன்று வருட ஒப்பந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நிறுவன இயக்குனர் தலைமைக் குழு புதிய அதிகாரியை தேர்வு செய்யும் வரையில், தலைமை நிதி அதிகாரி ரவிஷங்கர் கோபாலகிருஷ்ணன் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரிப் பதவியை வகிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் டூமேயின் திடீர் விலகலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஆஸ்திரேலியரான அவர் இதற்கு முன் ஏர் நியுசிலாந்து குழுமத்தின் தலைவராக பப்புவா நியு கினீ நாட்டில் பணியாற்றி வந்தார்.
தொழிலதிபர் நரேஷ் கோயலினால் நடத்தப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முந்தைய அதிகாரி நிகோஸ் கர்டாஸிஸ், அரபு விமான நிறுவனமான எதிஹாத் நிறுவனத்திற்குப் பங்குகளை விற்ற விவகாரத்தில், நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளால் பதவி விலகியதைத் தொடர்ந்து டூமே நியமிக்கப்பட்டார்.
கர்டாஸிஸ் பதவி விலகல் குறித்த செய்தி, கடந்த ஏப்ரல் மாதம் ஜெட் நிறுவனம் 24 சதவிகிதப் பங்குகளை ரூபாய் 2058 கோடிக்கு எதிஹாத் நிறுவனத்திடம் விற்க சம்மதித்த உடனேயே அறிவிக்கப்பட்ட்து. அந்தத் திட்டம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோதும், கடந்த நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.