டெல்லி: காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் டிக்கெட்டின் நிலையை தெரிந்து கொள்ள இனி 139 என்னும் எண்ணை டயல் செய்ய தேவை இல்லை. ஏனெனில் உங்கள் டிக்கெட், பயணத்திற்கு முன் உறுதி செய்யப்பட்டால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் டிக்கெட் முன் பதிவு நிலை குறித்து உங்களின் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியை அளிக்க உள்ளது.
எஸ்எம்எஸ் அலர்ட் சேவைக்கான ஒத்திகை கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் இருந்து உறுதி செய்யபட்ட டிக்கெட்டுகளை கொண்ட அனைத்து பயணிகளுக்கும் எஸ்எம்எஸ் அலர்ட் சேவை வழங்கும் செயல் முறை இந்த வாரம் முதல் நடைமுறை படுத்தப்படுகிறது என்று மாநிலங்களுக்கான ரயில்வே துறை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்தார்.
4 லட்ச பயனிகள்
இத்திட்டத்தின் மூலம் தினமும் காத்திருப்பு பட்டியலில் உள்ள தங்கள் டிக்கெட்டுகளின் நிலை குறித்து நான்குலட்சம் பயணிகள் பயனடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே தொழில்நுட்ப பிரிவு
எஸ்எம்எஸ் அலர்ட் சேவையை வழங்கும் மென்பொருள் ரயில்வேயின் தொழில்நுட்ப பிரிவான கிரிஸ் (CRIS) நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது.
எஸ்எம்எஸ் சேவை
டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யும் சமயத்தில் பயணிகளால் வழங்கப்படும் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்ஸ் அனுப்புவதன் வாயிலாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் நிலை குறித்து தொடர்பு கொள்ளப்படும். எனவே தற்பொழுது நீங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ள உங்கள் டிக்கெட், ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான முன்பதிவு பட்டியலில் இணைந்தாலோ அல்லது உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலோ அதனை நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரயில்வே பட்ஜெட்
ரயில்வே பட்ஜெட்டில் முன் மொழியப்பட்ட இந்த சேவை, பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என உறுதி கூறப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று எஸ்எம்எஸ் அலர்ட் சேவையை தொடங்கி வைத்த பின்னர் அவர் கூறினார்.
டிபி பாண்டே
பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளின் நிலை குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த புது சேவையின் மூலம் அவர்கள் மிகுந்த பயனடைவர். இது ரயில்வே இணைய தளத்தின் வேலை பளுவை குறைக்க உதவும் என்று ரயில்வே உறுப்பினர் டிபி பாண்டே தெரிவித்தார்.