டெல்லி: நிதி பற்றாக்குறையில் தவிக்கும் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 1,375 கோடி ரூபாயை உட்செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் இந்தியாவில் பல வங்கிகளிடம் நிதியுதவி கேட்டது. இதில் குறைவான நிதியை மட்டுமே இந்நிறுவனம் பெற்றது குறிப்பிடதக்கது.
புதிய விமானங்களை வாங்க துடியாய் துடித்து கொண்டு இருக்கும் இந்நிறுவனத்திற்கு இந்த நிதி போதுமானதாக இருக்கும்.
நிதி உட்செலுத்துதல்
மத்திய அரசு ஒப்புக் கொண்ட படி நடப்பு நிதியாண்டில் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 5,500 கோடி ரூபாயில் 1375 கோடி தற்போது அளித்துள்ளது. இந்த நிதி தனது புதிய வழித்தடமான ரோம் - மிலன் - மாஸ்கோ வழிதடத்தில் தனது சேவையை மேம்படுத்த உதவும்.
நிதி உதவி
கடந்த மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் அளித்தது குறிப்பிடதக்கது. மேலும் 2020ஆம் ஆண்டிற்குள் சுமார் 30,000 கோடி ரூபாய் நிதியளிப்பதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்ததில் தற்போது 14,575 கோடி ரூபாய் பெற்றுள்ளது ஏர் இந்தியா.
ஏர் இந்தியா
இந்நிறுவனம் வர்த்தகத்தில் அனைத்து துறைகளிலும் சாதனை பெற்று வருகிறது. ஆனால் அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியுதவி சிரியான காலகட்டத்தில் கிடைத்தால் நாங்கள் எளிதாக எங்கள் இலக்கை அடையமுடியும் என ஏர் இந்தியா உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர்இந்தியா-ஸ்டார் அலையன்ஸ்
ஏர்இந்தியா ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டிரிம்லைனர் சேவையை அளிக்க உள்ளது இதனால் அடுத்து வரும் நிதியாண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடனில் செயல்படும் நிறுவனம்
ஏர்இந்தியா நிறுவனம் தற்போது 26,000 கோடி ரூபாய் கடனில் செயல்படுகிறது. மேலும் இக்கடன் தொகை வங்கிகள் மற்றும் மத்திய அரசிடம் பெற்ற கடன் என்பது குறிப்பிடதக்கது.