பெங்களூரு: இந்திய சாப்ட்வேர் துறையின் முன்னணி நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம், குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை கைபற்றியுள்ளது. பெப்சி நிறுவனத்திற்கு அடுத்த 7 வருடம் இன்ஃபாரஸ்டக்சர் மேனேஜ்மென்ட் சர்விசஸ் (IMS) சேவையை வழங்க எச்.சி.எல் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெப்சிகோ
இந்த ஒப்பந்தத்தை குறித்து பெப்சிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்," மிகுந்த ஆய்விற்கு பிறகு எங்கள் நிறுவனத்தின் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்ய உள்ளோம். இந்த மாற்றத்தைக் கொண்டு சந்தையில் கடுமையான போட்டியை கொடுக்க எங்களை தயார் செய்து கொண்டுள்ளோம். இந்த முயற்சியில் பெப்சிகோ நிறுவனத்துடன் சேர்ந்து பணிபுரிய எச்.சி.எல் நிறுவனம் சிறந்த தேர்வாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்", என அவர் தெரிவித்தார்.
எச்.சி.எல்
இதுகுறித்து எச்.சி.எல் நிறுவனத்திடம் கேட்டபோது பெப்சிகோ நிருவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று மட்டும் தெரிவித்தது, இதர விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.
இதர பிராண்டுகள்
பெப்சிகோ நிறுவனம் பெப்சி குளிர்பானங்கள் மட்டும் அல்லாமல் லேஸ், டிராப்பிக்கான போன்ற பிராண்டுகளையும் விற்று வருகிறது.
கடும் போட்டியில் டிசிஎஸ், சிடிஎஸ்
பெப்சிகோ நிறுவனத்தின் டேட்டா சென்டரை மேம்படுத்தும் 100 மில்லியன் டாலர் ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு ஹெச்.பி நிறுவனம் கைபற்றியது. இந்த ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வருகிறது, இதை கைப்பற்ற டி.சி.எஸ் மற்றும் சி.டி.எஸ் நிறுவனமும் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளது.
காலாவதி ஒப்பந்தங்கள்
2014ஆம் ஆண்டின் முடிவில் சுமார் உலகில் 114 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் காலாவதியாகிறது, இதனை கைபற்ற ஐடி துறையில் ஒரு புயல் காற்று கண்டிப்பாக இருக்கும் என ஐடி ஆலோசனை குழுவான ஐஎஸ்ஜி தெரிவித்தது.