டெல்லி: ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1.32 கோடி ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல் சுமார் 18 லட்சம் விமான டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுது குறிப்பிடதக்கது.
வேலை தேடி ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதேபோல் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் எகிறி 6 கோடியைத் தாண்டியுள்ளது.
எளிமை.. வேகம்.. பாதுகாப்பு..
இப்போதெல்லாம் மக்கள் தங்கள் மொபைல் மற்றும் இண்டர்நெட் மூலமாகவே பஸ், ரயில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகின்றனர். ஒரே ஒரு எஸ்எம்எஸ் அல்லது ஒரே ஒரு மவுஸ் க்ளிக் போதும், உடனே நாம் போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் ரெடி! நமக்குப் பிடித்த உடைகளும் பொருட்களும் நம் வீடு தேடி வரும். அதேபோல் ஆன்லைனில் விண்ணப்பித்தும் எளிதில் வேலை தேடி விடுகிறோம்.
இண்டர்நெட் ராஜ்ஜியம்
மக்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் எளிய வகையில் கிடைக்கக் கூடிய டிஜிட்டல் ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்த துவங்கியுள்ளனர் என்பதையே இந்த புள்ளி விபரம் காட்டுகிறது. இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (IAMAI) இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
3 மடங்கு உயர்வு
கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 40 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் மட்டும்தான் ஆன்லைனில் விற்கப்பட்டன. இந்த ஆண்டின் முன்பதிவு 231 சதவீதம் அதிகமாகும்.
விமான டிக்கெட்
அதேபோல் ஏப்ரலில் விற்கப்பட்ட விமான டிக்கெட்டுகளின் முன்பதிவு 110 சதவீதம் உயர்வை எட்டியதுய. இதன் எண்ணிக்கை 17.8 லட்சம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 7.8 இலட்சம் மட்டுமே.
பயோடேட்டாவும்... வேலையும்..
வேலை தேடி இண்டர்நெட்டில் தங்கள் பயோடேட்டாவை அப்லோடு செய்பவர்களின் எண்ணிக்கையும் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2013ல் 10.6 லட்சம் மட்டுமே அப்லோடு செய்யப்பட்டன. இந்த ஏப்ரலிலோ அது 208 சதவீதம் அதிகரித்து 32.7 லட்சம் பயோடேட்டாக்கள் நெட்டில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைன் வியாபாரமும் தூள்
அதேபோல் ஆன்லைனில் நடக்கும் வியாபாரங்களும் சக்கைபோடு போட்டு வருகின்றன. பிராண்டட் உடைகளின் விற்பனை கடந்த ஆண்டை விட 127 சதவீதமும், காலணிகளின் விற்பனை 83 சதவீதமும் அதிகரித்துள்ளனவாம்.