நியூயார்க்: இந்தியாவில் வேகமான வளர்ந்து வரும் வங்கி நிறுவனங்களில் கனரா வங்கியும் ஒன்று. மேலும் இவ்வங்கி இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் தனது கிளையை துவங்கி வங்கி சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில் கனரா வங்கி நியூயார்க் நகரில் தன்னுடைய முதல் கிளையை துவக்கியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி தியானேஷ்வர் முலாய் இந்தக் கிளையைத் திறந்து வைத்தார். கிளையின் வளாகத்தை கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. துபே உடன் இருந்து துவக்கி வைத்தார்.
7 பணியாளர்கள்
இக்கிளையில் மொத்தம் 7 பேர் பணிபுரிவார்கள். அவர்களில் 4 பேர் இந்தியாவிலிருந்து நியமிக்கப்படுவார்கள், மீதம் 3 பேர் அமெரிக்கர்கள்.
7வது வெளிநாட்டுக் கிளை
கனரா வங்கியின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இவ்வங்கியின் வெளிநாட்டுக் கிளைகள் ஏற்கனவே லண்டன், லெய்செஸ்டர், ஹாங்காங், ஷாங்காய், பஹ்ரைன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் ஆகிய 6 நகரங்களில் உள்ளன.
மேலும் 7 கிளைகள்
நடப்பு நிதியாண்டுக்குள் ஜெர்மனி, துபாய், பிரேசில், டான்சானியா, ஜப்பான், நைஜீரியா மற்றும் கடார் ஆகிய நாடுகளில் கனரா வங்கி தன்னுடைய கிளைகளைப் பரப்ப உள்ளது. அனைத்தும் 7.
10 சதவீத வளர்ச்சி
கனரா வங்கியின் மொத்தக் கிளைகளில் 5.72 சதவீதம் வெளி நாடுகளில் உள்ளன. 2015 நிதியாண்டுக்குள் இதை 10 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.