மும்பை: இந்தியாவின் பல துறை நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டில் அடுத்த 3 வருடங்களில் சுமார் 1,80,000 கோடி முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் ஆம்பானி இன்று காலை நடந்த நிறுவனக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி துவக்கி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
நிலக்கரி
இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசுகையில் 2015-16ஆம் நிதியாண்டில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் மீத்தேன் தளத்தில் நிலக்கரி உற்பத்தியை துவங்கிவிடும் என அவர் தெரிவித்தார்.
4ஜி நெட்வொர்க்
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவையை இந்தியாவில் முழுவதும் அடுத்த மாத துவக்கத்தில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த 4ஜி சேவையில் இந்நிறுவனத்தின் முக்கிய டார்கெட் தென் இந்தியா தான்.
முதலீடு
இந்தியாவில் 4ஜி சேவையை செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
கடன்
நடப்பு நிதியாண்டின் இந்த 26 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தில், சுமார் 10,000 கோடி ரூபாயை கடன் திட்டங்களின் மூலம் பெற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ்
இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்தி துறையிலும், சேவை துறையிலும் பல நிறுவனங்களை துவங்கி வெற்றி கண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் பெட்ரோகெமிகல் துறையில் முதன்மை நிறுவனமாக இருப்பது ரிலையன்ஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் மேலும் ஒரு பெட்ரோகெமிகல் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
பங்கு சந்தை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 1069.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.