மும்பை: பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் 2,986 புரொபேஷனரி அதிகாரிகளை புதிதாக நியமிக்கவுள்ளது. இதற்கான தேர்வு நாள் மற்றும் இதர விபரங்களை வெளியிட்டுள்ளது.
தற்போது பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. சிறு நிறுவனங்களில் வேலை கிடைத்தாலே போதும் என்ற மனநிலை பல இளைஞர் மனதில் உதித்துள்ளது. இத்தருணத்தில் வங்கிகளில் வேலை கிடைத்தால் ஒரு தனி மரியாதைதான். அதிலும் எஸ்பிஐ போன்ற முன்னணி வங்கிகளில் வேலை கிடைத்தால் வாழ்கையே செட்டில் ஆனது மாதிரிதான் உணருவார்கள்.
பாரத ஸ்டேட் வங்கி தன் கிளை அலுவலகங்களுக்கு பி.ஓ அதிகாரிகளை நியமிப்பதற்காக எழுத்துத் தேர்வு நாள் மற்றும் தகுதி திறன் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
2,986 புரொபேஷனரி அதிகாரிகள்
அந்த வகையில் தற்போது 2,986 புரொபேஷனரி அதிகாரிகளை நியமிப்பதற்காக ஸ்டேட் வங்கி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
வயது வரம்பு
21 முதல் 30 வயதுள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி சிலருக்கு இந்த வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
ஆன்லைனில் பதியலாம்
இதற்கான விண்ணப்பங்களை செப்.1 முதல் 18ம் தேதி வரை ஆன்லைனில் பதிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு
இந்தப் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல சம்பளம்
எந்தெந்த ஊரில் போஸ்ட்டிங் போடப்படுகிறதோ மற்றும் அந்தந்த கிளைகளில் வழங்கப்படும் ஊதிய விகிதங்களின்படி, புரொபேஷனரி அதிகாரிகளின் சம்பளங்கள் மாறுபடும். உதாரணமாக, அவர்கள் மும்பையில் உள்ள கிளைகளில் வேலைக்கு சேர்வதாக இருந்தால் அவர்களுடைய மாத சம்பளம் ரூ.65,000 ஆகும்.
ஏற்கனவே நடந்த தேர்வின் முடிவுகள்
இதற்கிடையே கடந்த ஜூன்/ஜூலையில் புரொபேஷனரி அதிகாரிகள் நியமனத்திற்காக நடந்த எழுத்துத் தேர்வுகளின் முடிவுகளை ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான குழு விவாதங்களும், நேர்முகத் தேர்வுகளும் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் நடக்கும் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.