சென்னை: வீடுகள் மற்றும் மனைகளை வாங்க விரும்புபவர்கள் மற்றும் வாங்கி விற்க விரும்புபவர்கள் பண்டிகை காலத்தைத்தான் அதிகம் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். ஏனென்றால், இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் தான் நிறைய சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கும்.
அடுத்த சில மாதங்களில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என நிறையப் பண்டிகைகள் வரிசையாக வரவுள்ளன. இந்தப் பண்டிகைக் காலங்களில் வீடுகள், மனைகள் மட்டுமல்ல, வீட்டிற்குத் தேவையான பலவகையான பொருள்களும் சலுகை விலைகளில் கிடைக்கும்.
பண்டிகைக் காலங்களில் வீடுகள் மற்றும் மனைகளை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள் இதோ...
அதிக வருவாய்
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்தப் பண்டிகைக் காலங்களின் போதுதான் போனஸ், அட்வான்ஸ் என்று வருவாயின் அளவு அதிகரிக்கும். அதைப் பத்திரமாக முதலீடு செய்ய வீடு, மனை வாங்குவதுதான் பெஸ்ட் ஐடியா. குறைந்தது டவுன் பேமண்ட் கட்டுவதற்காவது உபயோகப்படுமே!
வங்கி சலுகைகள்
மனைகள் வாங்குவதற்கும் வீடுகள் கட்டுவதற்கும் பண்டிகைக் காலங்களில் நிறைய வங்கிகள் நிறைய சலுகைகளை வழங்குவார்கள். குறைந்த வட்டி விகிதம், சில கட்டணங்களிலிருந்து விலக்கு என்று வங்கிகளின் சலுகைகள் எகிறும் சமயம் இதுதான்.
தள்ளுபடி சலுகைகள்
விழாக் காலத்தை முன்னிட்டு பல கட்டட அதிபர்கள் நிறையத் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். இதனால், வழக்கமான வீட்டு விலைகளை விட சில லட்சங்கள் குறைய நிறைய வாய்ப்புள்ளது.
ஸ்பெஷல் சலுகைகள்
தங்களிடம் அபார்ட்மெண்ட் வீடு வாங்குபவர்கள் அல்லது கட்டுபவர்களுக்கு மாடுலார் கிச்சன், பதிவுக் கட்டணம், இலவச பார்க்கிங் என்று பல சலுகைகளை கட்டட அதிபர்கள் இந்தப் பண்டிகைக் காலங்களில் அள்ளி வீசுவார்கள்.
இலவச தங்கம், இலவச டூர்
சில கட்டட அதிபர்கள் தங்களிடம் வீடு வாங்குவோருக்கு பண்டிகைக் கால விசேஷ சலுகைகளாக இலவச தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள் மற்றும் இலவச சுற்றுலா கூப்பன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள்.