பெங்களுரூ: பெங்களுரூ-மைசூர் இடையேயான சாலையை, 6 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டி கர்நாடக அரசு முன்வைத்த ரூ.3,000 மதிப்பிலான திட்ட கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் மத்திய அரசு இச்சாலைக்கு தேசிய நெடுஞ்சால அந்தஸ்து வழங்கி மேலும் NH275 என்ற எண்ணை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதி முழுவதையும் வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
மாநில அரசின் பங்கு
இந்த திட்டத்திற்கு சாலையை அமைக்க தேவைப்படும் நிலத்தை ஒருங்கிணைத்து வழங்குவது மட்டுமே மாநில அரசின் வேலையாக இருக்கும் என்று கர்நாடக பொது பணி துறை அமைச்சர் மஹதேவப்பா தெரிவித்துள்ளார்.
நிதிதிட்டம்
ஒதுக்கப்படவுள்ள ரூ3000 கோடி, நிதியில் ரூ.1,100 கோடி ரூபாய் நிலத்தை கையகபடுத்தி ஒருங்கிணைக்கவும் ரூ.1,600 கோடி கட்டுமான பணிக்கும் ரூ.300 கோடி மாற்றியமைக்கும் பணிகளுக்கும் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2 ஆண்டுகள்
123 கிமீ நீளமுள்ள இந்த 6 வழி தேசிய நெடுஞ்சாலை ,சேவை சாலைகளை (சர்வீஸ் ரோடு) உள்ளடக்கியதாக அமையும். இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு, கட்டுமானப் பணி, நிதி, செயலாக்கம் மற்றும் DBFOT மாதிரி ஆகிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி இந்த திட்டதை நிறைவேற்ற 2 ஆண்டுகள் தேவைப்படும்.
சர்வே பணிகள்
இந்த திட்டத்திற்கான சர்வே பணிக்காக ஸ்கான் நிறுவனத்தை (SCON) ஆலோசகராக மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் சர்வே பணிகளை ஆரம்பித்து நிபுணர்கள் தங்கள் அறிக்கையை இன்னும் 2 மாத காலத்திற்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மஹதேவப்பா கூறினார்.
500 ஏக்கர் நிலம்
ஆரம்ப கணக்கின்படி சுமார் 500 ஏக்கர் நிலம் சாலை விரிவாக்கம், கட்டிட மேம்பாலங்கள், சுரங்க பாதைகளுக்காக தேவைப்படும் என்று மதிப்பிடப்படுள்ளது. இவை அனைத்தும் தன்னால் மதிப்பிடப்பட்ட பின்னரே கையகபடுத்தப்படும் என்றும் இதனால் விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதர திட்டங்கள்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சாலை விரிவாக்க பணியுடன் சேர்த்து, கட்டிட மேம்பாலங்கள் பிடாடி மற்றும் ஸ்ரீரங்கபட்டணா ஆகிய இடங்களிலும், சன்னபாட்னா மற்றும் மாண்டியா நகரங்களில் சுரங்கபாதை அமைக்கப்படும்