மும்பை: இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் டாப் சிஇஓக்கள் பற்றித்தான் எப்போதும் தலைப்புச் செய்திகள் வரும். அவர்களுடைய சம்பளம் 9 டிஜிட்டில் இருக்கிறதா அல்லது 10 டிஜிட்டில் எகிறுகிறதா என்பதைப் பார்க்கவும் அனைவரும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
அவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு ரொம்பவும் அமைதியாகத்தான் அவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
அவர்கள் இப்படி அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?? நிறுவன பங்குகளின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் ஏராளமான வருமானமாகவும் இருக்கலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், டாப் சிஇஓக்களின் சம்பளத்தை விட இது மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படி 'குறைவான' சம்பளம் பெறும் சிஇஓக்களின் பட்டியல் இதோ...
உமேஷ் ரேவாங்க்கர்
ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இவர், இதற்கு முன் இதே நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக இருந்தார். 2013ம் ஆண்டு கணக்கின்படி, இவருடைய ஆண்டு வருமானம் வெறும் ரூ.48.17 லட்சம் ஆகும்.
ஷ்யாம் ஸ்ரீனிவாசன்
கடந்த 4 ஆண்டுகளாக ஃபெடரல் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓவாக இருக்கும் இவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் வங்கி அனுபவம் உள்ளது. இவருடைய ஆண்டு வருமானம் ரூ.1.01 கோடி ஆகும். வங்கித் துறையில் ஒரு சிஇஓவுக்கு இது ஒரு குறைந்த சம்பளம்தான். ஆனால், வங்கிப் பத்திரங்கள் மூலம் இவருக்கு நிறைய வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.
அஜோய் மிஸ்ரா
டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனத்தின் சிஇஓவாக இந்த ஆண்டுத் துவக்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட இவருடைய ஆண்டு வருமானம் ரூ.1.8 கோடி ஆகும். இவ்வளவு பெரிய நிறுவனத்தின் சிஇஓவுக்கு இன்னும் அதிக சம்பளம்தான் இருப்பதாக அனைவரும் நினைப்பார்கள்.
வினோத் கே. தாசரி
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் எம்டியான இவர், இந்நிறுவனத்தின் உயர்மட்ட குழுவிலும் முக்கிய உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தைத் தொடர்ந்து, இவருடைய சம்பளம் 21% குறைந்து, இதனால் தற்போது இவர் ஆண்டுக்கு ரூ.2.12 கோடி சம்பளம் பெறுகிறார்.
எட்டின் பெனட்
மிகப் பெரும் எஃப்எம்சிஜி நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவராக உள்ளார் இவர். இதே நிறுவனத்தின் பல உலக கிளைகளிலும் பல்வேறு பதவிகளை வகித்த இவர், தற்போது இந்தியக் கிளையின் எம்டியாக ஆண்டுக்கு ரூ.2.13 கோடி சம்பளத்துடன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வெளி நாட்டவராகவும் இந்த மிகப்பெரும் நிறுவனத்தின் மேற்கு ஆப்பிரிக்கக் கிளையின் முன்னாள் சிஇஓவாகவும் இருக்கும் இவருக்கு இன்னும் அதிகமான சம்பளம் கிடைத்திருக்கலாம்.
சி.பி. குர்கானி
மஹிந்த்ரா சத்யம் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் டெக் மஹிந்த்ரா நிறுவனத்தின் எம்டி என்று இரட்டைப் பதவிகளை வகித்தும், இவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆண்டு வருமானம் ரூ.2.30 கோடி மட்டுமே.
அஜய் கபூர்
அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வெளியேறி மீண்டும் நிறுவன உயர் தலைவராக பதவி உயர்வு பெற்ற நிறுவனத்திற்குள் நுழைந்தார் அஜய் கபூர். இவருடைய ஆண்டு வருமானம் ரூ.2.32 கோடியாகும். ஆனால், ஷேர்கள் மற்றும் ஸ்டாக்குகள் மூலம் இவருக்குக் கிடைக்கும் தொகை இந்தச் சம்பளத்தை விட பல மடங்கு இருக்குமாம்.
பி.கே. கட்டாக்கி
எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் (Exide Industries) நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓவாக கடந்த 2013ல் இவர் நியமிக்கப்பட்டார். இவருடைய ஆண்டு வருமானம் ரூ.2.41 கோடியாகும்.
கிரண் குமார் கிராந்தி
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில் அணியின் அதிகமான பங்குகளை வைத்துள்ள ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் எம்டியாக உள்ளார் இவர். சுழற்சி முறையில் தற்போது இப்பதவியை வகிக்கும் இவருடைய ஆண்டு வருமானம் ரூ. 2.47 கோடியாகும்.
ரமேஷ் ஐயர்
மஹிந்த்ரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓவாக கடந்த 1995 முதல் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இவருடைய ஆண்டு வருமானம் ரூ.2.66 கோடியாகும். தன்னுடைய சேவைகளுக்காக பலப்பல விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய தலைமையின் கீழ், நாடு முழுவதும் 500 கிளைகளும், 9000க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.