டெல்லி: தென்னிந்தியாவில் முக்கிய துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் மையத்தில் இருப்பதால் விஜயவாடா தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விசாகப்பட்டினத்தின் மவுசு குறையவில்லை என்றே கூற வேண்டும்.
மேலும் தற்போது இருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு வருவாய் அளிக்கும் பெரும் சொத்தாகவே விசாகப்பட்டினம் உள்ளது. இந்நிலையில் விசாகப்பட்டினம் தற்போது அமெரிக்க உதவியுடன் ஸ்மார்ட்சிட்டியாக உருவாக உள்ளது.
பிரதமரின் அமெரிக்க பயணம்
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் அஜ்மீர் மற்றும் அலகாபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் அமெரிக்கவின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டியாக உருமாற உள்ளது. இதற்காக இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் உதவி
2014ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாட்டு வர்த்தகத்திற்கான வாயிலாக உள்ள விசாகப்பட்டினத்திற்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்தபடி, அமெரிக்காவிடம் அதற்கான நிதியுதவியை பெற ஒப்புதல் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
வளர்ச்சியில் உச்சம்..
பிஜேபி கட்சியின் மாநிலத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரிபாபு, விசாகப்பட்டினத்தின் வளர்ச்சியில் பிரதமரின் முனைப்பையும் உறுதியையும் இது காட்டுவதாகவும், இதனால் இந்த நகரத்தின் வளர்ச்சி மிகுந்த எதிர்காலம் குறித்த எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம்
மேலும் ஹரிபாபு கூறுகையில் "மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் மட்டுமே விஜயவாடா தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனால் விசாகப்பட்டினத்தின் வளர்ச்சி எந்தவிதத்திலும் பாதிப்படையாது. விசாகப்பட்டினம் ஆந்திரா மாநிலத்தில் விரைவில் வளர்ச்சி பெரும் நகரங்களில் ஒன்று" என அவர் தெரிவித்தார்.
வெங்கைய்யா நாயுடு
இந்த நகரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கைய்யா நாயுடு ஆகியோரின் வளர்ச்சிப்பட்டியலில் முன்னுரிமையில் உள்ளதாக ஹரிபாபு மேலும் குறிப்பிட்டார்.
சிம்பையாசிஸ் நிறுவனம்
அமெரிக்கா விசாகப்பட்டினத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளதையறிந்து மகிழ்ச்சியடைவதாக உள்ளூர் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான சிம்பையாசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நரேஷ் குமார் தெரிவித்தார்.