மும்பை: இந்தியாவில் வங்கிகளை திறக்க நாட்டின் 25 முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்த நிலையில் அமைதியாக வந்து ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமங்களை தட்டிச் சென்றது ஐ.டி.எஃப்.சி மற்றும் பந்தன் பைனான்சியல் நிறுவனங்கள்.
இவ்விரு நிறுவனங்களும் ஏற்கனவே நாட்டு மக்களுக்கு நிதிச்சேவை அளித்து வந்த நிலையில், முழுமையான வங்கியாக செயல்பட நாட்டின் பல்வேறு இடங்களில் வங்கிக் கிளைகள் மற்றும் பணியாளர்களை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஐ.டி.எஃப்.சி வங்கி மேலும் 1,500 பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐ.டி.எஃப்.சி நிறுவனம்
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான சுனில் காக்கர் கூறுகையில்,"தற்போது நிறுவனத்தில் 600 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் நாட்டில் முழுமையான வங்கியாக செயல்படும் முன் சுமார் 1500 புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு
மேலும் இந்நிறுவனம் அடுத்த நிதியாண்டின் துவக்கும் முதல் நிறுவனத்தில் ஆட்சேப்பு பணி துவங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்நிறுவனம் முழுமையான வங்கியாக செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்துள்ளது.
முக்கிய பணியாளர்கள்
ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரியான விக்ரம் லிமாயே அவர்கள் கூறுகையில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழு, வங்கி மற்றும் வங்கி கிளையின் நிர்வாக இயக்குனர் போன்ற முக்கிய பணியாளர்களின் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. மேலும் நிறுவன அமைப்பிற்கு தேவைப்படும் இதர பணியாளர்களை பகுதி பகுதியாக நிறுவனத்தில் சேர்க்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி
டாடா, ரிலையன்ஸ் மற்றும் பிர்லா குழுமம் உட்பட சுமார் 27 நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ஐ.டி.எஃப்.சி மற்றும் பந்தன் நிறுவனத்தை இந்தியாவில் வங்கிச்சேவை அளிக்க சில மாதங்களுக்கு முன் தேர்வு செய்துள்ளது. மேலும் அடுத்த 18 மாதங்களில் இந்நிறுவனம் முழுமையான வங்கியாக செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்துள்ளது.
இந்திய வங்கிகள்
இந்தியாவில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றம் அதன் இணைப்பில் 7 வங்கிகள், 77 மாநில வங்கிகள், 19 தனியார் வங்கிகள், 32 பன்னாட்டு வங்கிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் 29 வெளிநாட்டு வங்கிகள், இந்நிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது இப்பட்டியலில் பந்தன் மற்றும் ஐ.டி.எஃப்.சி ஆகிய 2 புதிய வங்கிகளும் இந்திய வங்கியியல் அமைப்பில் இணைகிறது.