டெல்லி: இந்தியாவில் செல்போன் மூலமாக இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2017 - 18 ஆம் நிதியாண்டிற்குள் மொபைல்போனில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து 50.10 கோடியை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 19.80 கோடியாக இருந்தது என சர்வதேச தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.மேலும் இதன் மூலம் கிடைக்க கூடிய வருவாயும் 88,300 கோடி ரூபாயாக உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணையதள இணைப்புகள் விரிவாக்கம் போன்றவை மொபைல் போன் இணைய பயன்பாடு எளிதில் அதிகரிக்க சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டாக இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10.80 கோடியாக உள்ளது. இதில் 75 சதவீதம் பேர் மொபைல் வழியாகவே இதை அணுகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.