டெல்லி: நாட்டின் உள்நாட்டு விமான சேவை கடந்த அக்டோபர் மாதத்தில் 18% அளவுக்கு அதிகரித்துள்ளது. இதில் இண்டிகோ நிறுவனம் முதலிடத்திலும் ஏர் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது.
உள்நாட்டு விமான சேவைகள் மூலம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 50.08 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் இது 59.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இண்டிகோ விமான நிறுவனம் மூலம் 18.90 லட்சம் பேரும் ஏர் இந்தியா மூலமாக 11.56 லட்சம் பேரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்த்தின் மூலமாக 10.27 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூலமாக 9.73 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
மிகக் குறைந்த அளவாக ஏர் ஏசியா நிறுவனத்தின் மூலம் 66 ஆயிரம்பேர்தான் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் அக்டோபர் வரையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உள்நாட்டு விமான சேவையானது 8.61% அதிகரித்துள்ளது.
மேலும் அக்டோபர் மாதத்தில் சேவைகள் ரத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக சுமார் ரூ1.5 கோடி அளவுக்கு பயணிகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் பணத்தை செலுத்தியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.