பெங்களுரூ: இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் வருவாயிலும், பணியாட்கள் எண்ணிக்கையிலும் முதன்மையாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தில் திறமையற்ற பணியாளர்களை (Non performers) நிறுவனத்தை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளது டிசிஎஸ் நிர்வாகம்.
இயல்பான விஷயம்
டிசிஎஸ் நிறுவனத்தில் இத்தகைய நடவடிக்கை குறித்து இத்துறை வல்லுனர்கள் கூறுகையில்,"தகவல் தொழில்நுட்ப துறையில் இது மிகவும் சாதாரண விஷயம், இதனால் பல பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் இது நிர்வாகத்தால் மறுக்க முடியாத நடவடிக்கையாகும்." என தெரிவித்தனர்.
டார்கெட்
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மனிதவளத்துறையின் குளோபல் ஹெட் மற்றும் நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜோய் முகர்ஜி கூறுகையில்," நிறுவனத்தில் பணியாளர்களை குறைக்க எண்ணிக்கை (டார்கெட்) எதுவும் இல்லை, மேலும் இது அதிரடியாகவும் செய்யப்படுவதில்லை, எனவே இது நீண்டகால செயல்" என்றும் அவர் தெரிவித்தார்.
திறமையற்ற
மேலும் அவர், சந்தையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களின் ஒன்று, எங்கள் நிறுவனத்தில் எப்போதும் நாங்கள் அனைத்து பணியாட்களையும் சிறப்பாக பணியாற்றவே ஊக்குவித்து வருகிறோம். இந்நிலையில் நிறுவனத்தில் சரியான முறையில் பணியாற்ற தவறிய பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்குவதை தவிற வேறு வழி இல்லை என்று அவர் தெரிவித்தார்.
எல்லோருக்கும் ஆப்பு ரெடி
இந்நிறுவனத்தில் உயர் மட்டம், நடுத்தர மற்றும் கடைநிலை ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த நடவடிக்கையில் உட்படுத்தப்படும் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிற நிறுவனங்கள்
இவ்வருடம் இத்தகைய நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் விப்ரோ, ஐபிஎம், யாஹூ, சிஸ்கோ போன்ற பல நிறுவனங்கள் கையாண்டு வருகிறது.